வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரயில் சேவைகள் பாதிப்பு.. மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தலைநகர் மும்பை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளா முதல் மகாராஷ்டிரா வரை தீவிரம் காட்டி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் குளிரான வானிலை தற்போது நிலவுகிறது. கர்நாடகாவிலும் மலை மாவட்டப் பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மீது கந்துவட்டி புகார்... பாய்ந்தது வழக்கு..!
கடும் மழை
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 280 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக மகாராஷ்டிரா தத்தளித்து வரும் நிலையில் வெள்ள பாதிப்பும் சேர்ந்து மக்களை பாடாய் படுத்துகிறது .
சாலையில் வெள்ளம்
அடுத்த 24 மணிநேரத்தில் மும்பையில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முதல் பெய்துவரும் மழை காரணமாக மும்பை நகரின் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நடந்து செல்வோரின் முட்டி வரை தண்ணீர் ஓடுவதைப் பார்க்க முடிகிறது.
ரயில் சேவை
தண்ட வாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், சென்ட்ரல் மற்றும் துறைமுகம் இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தாழ்வான பகுதிகள்
சில பகுதிகளில் மருத்துவமனைகளுக்கும் தண்ணீர் புகுந்து உள்ளதாகவும் இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மக்கள் வீடுகளுக்குள் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாநகராட்சி, தீயணைப்பு உட்பட பல துறைகள் இணைந்து வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றன.