மும்பை நடைபாதை மேம்பால விபத்து - 5 பேர் பலி… பலர் படுகாயம்... பிரதமர் மோடி இரங்கல்
மும்பை: மும்பையின் முக்கிய பகுதியான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
மாலை நேரத்தில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் பலர் காயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோரை உடனடியாக மீட்டு மும்பையின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் வந்து செல்லும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. யணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாகவே பாலம் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தேரி மையத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்து, பிஎம்சி (பிரிஹன்மும்பை முனிசிபல் கார்பரேஷன்) பகுதியில் நிகழ்ந்துள்ளது என்றும், எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், ரயில்வே மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பிஎம்சியுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, மும்பை நடைபாதை மேம்பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டி கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உரிய உதவிகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதே நேரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உரிய உதவிகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பார்வையிட்டார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு மும்பையில் எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது குறிப்பிடத்தக்கது.