மும்பையில் பேய்க்காற்றோடு பெய்த கனமழை - வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை
மும்பையில் 107 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றோடு கனமழையும் பெய்ததால் வெள்ளநீர் மருத்துவமனையை சூழ்ந்துள்ளது.
மும்பை: தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தினால் மும்பையில் கடும் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. காற்றோடு கூடிய கனமழை கொட்டித்தீர்த்ததால் காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 107 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்று மும்பையின் பல பகுதிகளை சூறையாடியுள்ளது. சாலைகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீர் மருத்துவமனைக்குள் புகுந்துள்ளதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது மும்பை. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ரயில் தண்டவாளங்களில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை சென்ட்ரல் லைனில் இருக்கும் மஸ்ஜித் மற்றும் பைகுல்லா ரயில் நிலையங்களுக்கு இடையில் புறநகர் ரயில் ஒன்று சிக்கிக் கொண்டது. இதேபோல ரயில் தண்டவாளங்களில் சில ரயில்கள் சிக்கிக்கொண்டன.
தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், மோட்டார் படகுகள் மூலம் இரண்டு ரயில்களிலும் இருந்த பயணிகளை மீட்டனர்.
மென்மையான இந்துத்துவா போக்கு...இதுதான் காங்கிரஸ்... பினராயி விளாசல்!!.
தாஹானு பகுதியில் 75 ஆண்டுகளில் இல்லாத பெருமழை ஆகஸ்ட் மாதத்தில் பெய்துள்ளது. கடந்த 1945ல் 355 மி.மீ மழை பதிவான நிலையில், தற்போது 383 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. இதையொட்டி பால்கர் மாவட்டத்தில் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த மூன்று மணிநேரத்திற்குள் கனமழையும் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.