மனைவியிடம் வரதட்சிணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது.. அதிர்ச்சி தீர்ப்பளித்த "அதே" பெண் நீதிபதி
மும்பை: மனைவியிடம் வரதட்சிணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என மும்பை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். இவர் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கி வருகிறார்.
அண்மையில் போக்சோ சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, உடலுறவு கொள்வதைத் தவிர தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே பாலியல் அத்துமீறலாகும் என்று அண்மையில் தீர்ப்பளித்தார்.
காயங்கள் இல்லை
அது போல் மற்றொரு வழக்கில் சிறுமியின் கையை பிடித்திருப்பதும் பேன்டின் ஜிப் திறந்திருப்பது ஆகியவை பாலியல் அத்துமீறலாகாது என தீர்ப்பளித்தார். அது போல் மற்றொரு வழக்கில் பலாத்காரம் செய்திருந்தால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இல்லை.
அதிரடி
மருத்துவ அறிக்கையும் காயங்கள் இல்லை என கூறிவிட்டதால் இந்த சம்பவம் இருவரது விருப்பத்தின் பேரிலேயே நடந்திருக்கும் என அதிர்ச்சி தீர்ப்பை அளித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த நிலையில் நீதிபதி புஷ்பாவின் அடுத்த அதிரடியாக மனைவியிடம் கணவர் வரதட்சிணை கேட்பது துன்புறுத்தலாகாது என அதிர்ச்சியான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
பெண் தற்கொலை
கடந்த 1995ஆம் ஆண்டு பிரசாந்த் ஜாரே என்பவரை திருமணம் செய்து கொண்ட ஒரு பெண், தன்னை கணவரும், மாமியாரும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்துவதால் 2004ஆம் ஆண்டு அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் கணவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.
துன்புறுத்தலே இல்லை
அப்போது ஐபிசி பிரிவு 498 இன்படி மனைவியிடம் பணம் கேட்பது, வரதட்சிணை கேட்பது துன்புறுத்தலே ஆகாது என பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளார். இது போல் அவ்வப்போது சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வருகிறார். இது போல் இவரது தீர்ப்புகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருவதால் மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பரிந்துரையை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.