வீட்டு வேலையை மனைவிதான் செய்ய வேண்டுமா..? கணவன்மார்களை கொட்டிய மும்பை கோர்ட்!
மும்பை: வீட்டு வேலைகளை மனைவியே தான் செய்ய வேண்டும் என்று கணவர் எதிர்பார்ப்பது தவறானது என்று மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
இந்த நவீன காலத்திலும் ஆண், பெண் பாகுபாடு பார்க்கப்பட்டுத்தான் வருகிறது. சமஉரிமை குறித்து எத்தனையோ பேர் பேசி வந்தாலும் அவர்களின் வீடுகளில் பெண்களுக்கு சமஉரிமை கொடுக்கப்படுகிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் ஓரளவுக்கு நல்ல வாழ்க்கையை நகர்த்த முடிகிறது. 3 வேளை உணவு, இருக்க இடம், உடுத்த ஆடை, குழந்தைகளின் கல்வி ஆகியவையே தம்பதியின் எண்ணவோட்டமாக இருக்கிறது.
அதிகாலை
இதனால் இரவில் லேட்டாக தூங்கி அதிகாலையில் கோழி கூவும் முன்பே எழுந்து சிற்றுண்டி, மதிய உணவை தயார் செய்துவிட்டு மற்ற சுற்று வேலைகளை செய்து விட்டு ஒரு சோற்று உருண்டை கூட வாயில் போட்டுக் கொள்ள முடியாத அளவுக்கு பிஸியாக வேலைக்கு ஓடுகிறார்கள் பெண்கள்.
சம்பாதிப்பது
பின்னர் வேலை முடிந்ததும் அடித்து பிடித்து வீட்டிற்கு வந்து தேனீர், இரவு நேர உணவை தயார் செய்யும் பணியில் மும்முரமாகிறார்கள். பின்னர் குழந்தைகளின் வீட்டுப் பாடத்திற்கு உதவுகிறார்கள். இப்படியாக பெண்கள் வீட்டையும் கவனித்து கொண்டு சம்பாதிக்கவும் செய்கிறார்கள்.
தியாகம்
ஆனால் சில ஆண்கள் பெண்களின் இந்த தியாக குணத்தை பாராட்டாமல் உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் மனைவியிடம் வன்முறையில் இறங்குகிறார்கள். அப்படித்தான் டீ போட்டு கொடுக்காததால் மனைவியை கணவர் கொன்ற சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாதாரணமானவை
இந்த வழக்கில் கணவன் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை மும்பை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குகள் சாதாரணமானவை அல்ல என்றனர்.
உயிர்
பாலின ஏற்றத்தாழ்வுகளை இதுபோன்ற கொலை சம்பவங்கள் கட்டமைக்கிறது என்று அவர்கள் கூறினர். மனைவி என்பவள் பொருள் அல்ல, அவரும் ஒரு உயிர் தான் என்று கூறிய நீதிபதிகள், பாலின ஏற்றத்தாழ்வு அதிகரித்து இருக்கிறது என்றும் தெரிவித்தனர். அனைத்து வீட்டு வேலைகளையும் மனைவியே செய்ய வேண்டும் என்று கணவர் எதிர்பார்ப்பது தவறானது என்றும் கூறினர்.