தொடரும் ரமணா பாணி.. பெற்ற தாய் உயிருடன் இருக்கிறார் என பொய் கூறி ரூ.285 கோடியை சுருட்ட முயன்ற மகன்
மும்பை: மும்பையில் ரூ. 285 கோடி சொத்துகளை சுருட்டுவதற்காக உயிரிழந்த தாய் உயிருடன் இருக்கிறார் என கூறி ஏமாற்றிய அண்ணன் மீது தம்பி புகார் அளித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்தவர் கம்லேஷ் ராணி. இவர் கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி உயிரிழந்தார். இவருக்கு ரூ. 285 கோடி சொத்துகள் இருந்தன. அத்துடன் நொய்டாவில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் ஆலையும் இருந்தது.
இறப்பதற்கு முன்னர் ராணி தனது உயிலில் தனது சொத்துகளை மகன்கள் சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் இறந்தவுடன் அவரது மூத்த மகன் சுனில் குப்தா , அவரது மனைவி ராதா, மகன், அபிஷேக் ஆகியோர் சொத்துகளை தாங்களே எடுத்து கொள்ள நினைத்தனர்.
உயிருடன்
இதையடுத்து நொய்டா மெழுகு ஆலையை தன் பெயரில் தாய் எழுதிக் கொடுத்துவிட்டதாக சுனில் பொய்யாக ஒரு சான்றை தயார் செய்து அதை மும்பை பத்திரபதிவு அலுவலகத்தில் கொடுத்துவிட்டார். அப்போது தாய் உயிருடன் இருப்பதாகவே குறிப்பிட்டுள்ளார்.
அடியாட்கள்
அது போல் தாய் இறந்த ஒரே வாரத்தில் தனது தம்பி விஜய் குப்தாவுக்கு தெரியாமல் ரூ. 29 கோடி பணத்தை சுருட்டியுள்ளார். இதுகுறித்து விஜய் குப்தா, சுனிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சுனிலோ அடியாட்களை கொண்டு கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
விஜய் புகார்
இதனால் பொறுத்திருந்த விஜய், இப்படியே போனால் ரூ. 285 கோடி சொத்தையும் சுனில் அபேஸ் செய்துவிடுவார் என கருதிய விஜய் அவர் மீது போலீஸில் புகார் செய்தார்.
அதிர்ச்சி
இதையடுத்து விசாரணையில் விஜய் கூறியது உண்மை என அறிந்த போலீஸார், சுனில், அவரது மனைவி, மகன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். தாய் இறந்ததை மறைத்து பொய்யான ஆவணங்களை உருவாக்கி ரூ.285 கோடி சொத்துகளை மனைவி, மகனுடன் சுருட்ட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.