மும்பையில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் உணவகங்கள் இனி திறந்திருக்கும்... அமைச்சரவை ஒப்புதல்
மும்பை: மும்பை மாநகரில் 24 மணி நேரமும் மால்கள், தியேட்டர்கள் செயல்படுவதற்கு அம்மாநில கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு காரணமாக சேவை துறையில் கூடுதலாக ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஆதித்யா தாக்கரே கூறினார்.
மும்பையில் உள்ள மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் மால்களை 24 மணி நேரமும் திறந்து வைக்கும் திட்டத்திற்கு மகாராஷ்டிரா அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது,
ஜனவரி 27 முதல் இனி 24 மணி நேரமும் மும்பை வர்த்தக நிறுவனங்கள் கடைகள் என அனைத்தும் திறந்தே வைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில சுற்றுலா துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறுகையில், "ஜனவரி 27 முதல், பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மற்றும் நாரிமன் பாயிண்ட் போன்ற குடியிருப்பு அல்லாத பகுதிகளில் உள்ள மால்கள், மல்டிபிளெக்ஸ், கடைகள் மற்றும் உணவகங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும்" என்று கூறினார். இருப்பினும், கடைகள், மால்கள் மற்றும் உணவகங்களை இரவில் திறந்து வைப்பது கட்டாயமில்லை என்றும் ஆதித்யா தாக்கரே கூறினார்.
"நல்ல வியாபாரம் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இரவு முழுவதும் தங்கள் நிறுவனங்களைத் திறந்து வைக்க முடியும்," என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்தார். அரசின் இந்த முடிவால் சேவை துறையில் கூடுதலாக ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் ஆதித்யா நம்பிக்கை தெரிவித்தார்.