கல்யாணம் முடிச்ச கையோட.. மும்பை ஜோடி செய்த செயல்.. மனசை தொட்டுட்டாங்களே
மும்பை: மும்பையில் புதுமணத் தம்பதிகள் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக 50 படுக்கைகள் வழங்கி அசத்தியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வாழ்க்கை முறைகளை பெரியளவில் மாற்றியுள்ளது. விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள் என்று அனைத்தையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
மகாராஷ்டிராவில் திருமணங்களில் கலந்து கொள்ள தற்போதுதான் 50 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட இதே போலத்தான் கட்டுப்பாடுகள் உள்ளன.
நாளை மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து துண்டிப்பு இனி இ. பாஸ் கட்டாயம் - முதல்வர்
காதல் தம்பதி
இந்த நிலையில் மும்பையில் இருக்கும் வசாய் பகுதியில் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் அந்தப் பகுதியில் இருக்கும் கோவிட் நல மையத்திற்கு இலவசமாக 50 படுக்கைகள் வழங்கினர். மும்பையைச் சேர்ந்தவர் எரிக் லோபோ. வயது 28. மெர்லின் டஸ்கானோ. வயது 27. இவர்கள் இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
20 பேர் மட்டுமே
இந்த நிலையில் வரும் குளிர் காலத்தில் 2,000 விருந்தினர்களை அழைத்து திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து இருந்தனர். ஆனால், தங்களது மனதை மாற்றிக் கொண்டு தற்போது திருமணம் செய்து கொண்டனர். இதற்குக் காரணம் ஏதாவது ஒரு வகையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான். கடந்த சனிக்கிழமை இவர்களது திருமணத்தில் 22 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். வசாயில் இருக்கும் செயின்ட் கோன்சலோ கார்சியா தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடந்தது.
50 படுக்கைகள் தானம்
இதையடுத்து, இவர்கள் இருவரும் அருகில் இருக்கும் சட்பாலா கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தல் மையத்துக்கு சென்றனர். இலவசமாக 50 படுக்கைகள், தலையணை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கினர். இதுகுறித்து எரிக் கூறுகையில், ''திருமணத்திற்கு நாங்கள் சேமித்து வைத்து இருந்த பணத்தை நல்ல முறையில் செலவழிக்க விரும்பினோம். தற்போது கொரோனா தொற்றால் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் கொடுத்து உதவினோம்'' என்று தெரிவித்துள்ளார்.
திருமண ஆடையும் வேண்டாம்
ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் இருவரும் பரிசுகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மணப்பெண் தனக்கு என்று புதிய திருமண ஆடையும் வாங்கிக் கொள்ளவில்லை. திருமணத்தின்போது அணியும் ஆடையை வாடைகைக்கு எடுத்துக் கொண்டார். இதுமட்டுமல்ல திருமணத்திற்கு முன்பு இருந்தே சமையலறை அமைத்து தன்னார்வலர்களுடன் இணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது, ரயிலில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தல் என்று சேவை செய்து வருகின்றனர்.
குவியும் பாராட்டு
ஹனிமூனை ஒத்தி வைத்து விட்டு தொடர்ந்து, இந்த சேவைகளை செய்ய இருப்பதாக இந்த ஜோடி தெரிவித்துள்ளது. இவர்களது சேவையை எம்எல்ஏ ஷிட்ஜி தாகூர் பாராட்டியுள்ளார். பல தரப்பில் இருந்தும் வாழ்த்து குவிந்து வருகிறது. இவர்களைப் போன்று ஷாநவாஸ் என்பவரும் தனது சொந்தக் காரை விற்று 250 பேருக்கு இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கியுள்ளார்.
அதிக பாதிப்பு
மகாராஷ்டிராவில்தான் இன்று இந்தியாவிலேயே அதிகளவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. தினமும் பாதிப்போரின் எண்ணிக்கை 3000த்தை கடந்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று வரை 139,010 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து ஒரு நாள் உயிரிழப்பு 248 என்ற அளவில் அதிகரித்து, இன்று வரை 6,531 பேர் உயிரிழந்துள்ளனர்.