இதுவரை இல்லாத அளவு மோசமான மின் தடை.. இரண்டரை மணி நேரம் ஸ்தம்பித்த மும்பை.. இயங்க முடியாத ரயில்கள்
மும்பை: இந்தியாவின் நிதி தலைநகர் மும்பை இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான மின்தடையால் இன்று ஸ்தம்பித்துப் போனது.
இதுவரை மும்பை மக்கள் வாழ்நாளில் இப்படி ஒரு மின்தடையை பார்த்தது கிடையாதாம். அந்த அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டது இந்த மின்தடை.
காலை 10:05 மணியளவில், ஒட்டுமொத்த மும்பை மாநகரத்தில் மின்னிணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. எதற்காக இப்படி ஆனது என்பது யாருக்கும் அப்போது புரியவில்லை.
உண்மையிலேயே "அவர்"தான் காரணமா.. சுந்தர் சி.யோடு டெல்லிக்கு போய் அந்தர் பல்டி அடித்த குஷ்பு!
மக்கள் ஏமாற்றம்
அரை மணி நேரத்தில் வந்து விடும்.. ஒரு மணி நேரத்தில் வந்து விடும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. மின்சார வாரியத்துக்கு பொதுமக்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் குவிந்தன. இதனால் போன் இணைப்பு எப்போதும் பிஸியாக இருந்தது. மின் இணைப்பு சப்ளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மும்பை முழுக்க மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக பெருநகர் மும்பை மின்சார விநியோக அமைப்பு தெரிவித்தது.
சர்க்யூட் பிரச்சினை
மகாராஷ்டிரா மின்சாரத்துறை அமைச்சர் நிதின் ராவத் காலை 11.35 மணியளவில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கல்வா-பட்கே மின்நிலையத்தின் சர்க்யூட் 2ல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தானே மற்றும் மும்பைக்கு இடையிலான பகுதிகள் மின்வெட்டை சந்தித்து வருகிறது. நமது ஊழியர்கள் அதை நிவர்த்தி செய்ய பணியாற்றி வருகின்றனர். ஒரு மணி நேரம் அல்லது 45 நிமிடங்களில் மின்சார இணைப்பு திரும்பும், என்று ராவத் தெரிவித்தார்.
புறநகர் ரயில் சேவை பாதிப்பு
இதனிடையே மும்பையின் ஜீவ நாடியான புறநகர் ரயில் சேவை, மின் துண்டிப்பால் நிறுத்தப்பட்டது. அதேபோல மருத்துவமனைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஜெனரேட்டர்கள் மூலமாக மின்னிணைப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஐசியூ வார்டுகளில் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் ரயில்கள் ஆங்காங்கே நின்று விட்டதால் பயணிகள் கீழே இறங்கி நடந்து செல்வதை பார்க்க முடிந்தது.
திரும்பி வந்த மின்சாரம்
ஒருவழியாக மின்சாரம் படிப்படியாக மும்பையின் பல பகுதிகளிலும் திரும்பியதும், 12.20 மணிக்கு மேல் புற நகர் ரயில்கள் இயங்கத் தொடங்கின. மும்பைக்கு, அதானி எலக்ட்ரிசிட்டி, டாடா பவர் சப்ளை ஆகிய தனியார் நிறுவனங்களும், அரசின் 'பெஸ்ட்' அமைப்பும் மின் சப்ளை செய்கின்றன. இதில் டாடா நிறுவனத்தின் சப்ளையில்தான் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டுள்ளார்.