மும்பையில் தொழிலாளர்கள் போராட்டம்.. உத்தவ் தாக்கரேவுக்கு அமித் ஷாவிடம் இருந்து பறந்த போன் கால்!
மும்பை: கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு எதிராக இன்று மாலை மும்பையின் பாந்த்ராவில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை தொலைப்பேசியில் அழைத்து கவலை தெரிவித்தார்.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் பல்லாயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். ஆனால் கடந்த மார்ச் 24ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அறிவித்தால் அடுத்த 4மணி நேரத்தில் ஊரடங்கு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலையில்லாமல் உணவில்லாமல் தவித்தனர்.
வறுமையில் வாடிய அவர்கள் ரேஷன் கார்டு இல்லாததால் அரசின் உதவித்தொகை, உணவு தானியங்கள் பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிந்ததால் எப்படியும் வீட்டுக்கு போய்விடலாம் என்று தொழிலாளர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் பிரதமர் மோடி இன்று காலை பேசும் போது மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
பாந்த்ராவில் போராட்டம்
இதனால் வேதனை அடைந்த வெளிமாநில தொழிலாளர்கள், தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றும் எனவே சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புமாறும் கோரி
மும்பை புறநகரில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்தில் 3,000 க்கும் மேற்பட்டோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகாராஷ்டிரா அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. உணவு, தங்குமிடம் வழங்கப்படும் என்று அரசு உறுதி அளித்தது. ஆனால் ஏற்க மறுத்த அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
சிதறிய கூட்டம்
இதையடுத்து மும்பை போலீசார் வெளிமாநில தொழிலாளர்களை தடியடி நடத்தி கலைத்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வசதி செய்து தரப்படும் என்று மகாராஷ்டிரா காவல்துறை அதன்பிறகு உறுதி அளித்துள்ளது. இதனிடையே உணவு கிடைக்காத காரணத்தால் தொழிலாளர்கள் ஊருக்கு அனுப்புமாறு போராடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போனில் அழைப்பு
இதனிடையே மும்பையின் பாந்த்ராவில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை தொலைப்பேசியில் அழைத்து கவலை தெரிவித்தார். இத்தகைய நிகழ்வுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்துவதாகவும், இவற்றைத் தவிர்க்க நிர்வாகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அமித் ஷா முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்தார். மேலும் அமித் ஷா கொரோனாவை தடுப்பதில் தனது முழு ஆதரவையும் மகாராஷ்டிரா அரசுக்கு வழங்குவதாகவும் உறுதி அளித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் கவலை
இதனிடையே எப்படியும் ரயில்கள் இயக்கப்படும் என்று நம்பி தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்ற நினைத்து இப்படி குவிந்ததாக முதல்வர் உத்தவ் தாக்கரே ஊடகங்களிடம் விளக்கம் அளித்தார். இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் முயற்சியின் காரணமாக அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மூடக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை மற்றும் வீடுகள் இல்லாமல் கடும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர்.
வடமாநிலத்தர்கள்
இன்று மும்பையில் போராடியவர்களில் பலர் பெரும்பாலும் மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகம் பேர் (2300) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பை மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பையில் மிகப்பெரிய கூட்டம் கூடியது கொரோனா குறித்த கவலையை அதிகரித்துள்ளது.