விடாது துரத்தும் மழை.. மும்பைக்கு ரெட் அலர்ட்
மும்பை: மீண்டும் மும்பையில் கன மழை, பெய்யும் என்று, எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் பிறப்பித்துள்ளது.
மும்பையில் பலத்த மழை பெய்து, 40 க்கும் மேற்பட்டோர் பலியான வடு ஆறுவதற்கு முன்பாக, மீண்டும் அங்கு கன மழைக்கான ரெட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் தெற்கு கொங்கன் பகுதியில் மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ராய்காட், தானே மற்றும் பால்கர் மாவட்டங்களிலும் கனமழை முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என்று அந்த எச்சரிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அதிக உயரத்தில் எழும் அலைகள் மற்றும் காற்றின் வேகம் வெள்ளிக்கிழமை வரை 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும் என்பதால், அரபிக் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மும்பையைத் தவிர, மகாராஷ்டிராவின் பிற பகுதிகளும் பருவமழை ஆக்ரோஷத்தை எதிர்கொண்டு வருகின்றன. தானே மாவட்டத்தின் தித்வாலா பகுதியில் திங்கள்கிழமை மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து 12 வயது சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர். அண்டை பகுதியான நவி மும்பையில், டர்பே பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பலத்த மழை வெள்ளம் சில குடிசைகளை அடித்துச் சென்றுவிட்டது.
ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அஜ்மீரில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அஜ்மீரின் பினாய் பகுதியில் 7 செ.மீ மழையும், சித்தோர்கரில் 5 செ.மீ மழையும், பல பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் காலைவரை 5 செ.மீ அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது.
ஹரியானாவின் சண்டிகரில் 29.1 மி.மீ மழை பெய்தது, ஈரப்பதமான வானிலை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இருப்பினும், தலைநகர் டெல்லியில் வெப்பமான வானிலை நிலவுகிறது. 36.7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அங்கு வெப்பம் நிலவியது.