மும்பையில் நிரந்தரமாக மூடப்பட்ட "கராச்சி பேக்கரி.." வெற்றி.. வெற்றி.. கொண்டாடும் நவநிர்மான் சேனா
மும்பை: மும்பையின் புகழ்பெற்ற கராச்சி பேக்கரி மூடப்பட்டுள்ளது. இதை, தங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கூறி வருகிறது.
1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தவரால் மும்பையில், இந்த பேக்கரி நிறுவப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு, மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தொண்டர்கள், இது "பாகிஸ்தான் நகரத்தின் பெயர்" என்று கூறி விமர்சனம் செய்து பெயரை மாற்றக் கோரி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், கராச்சி பேக்கரி தற்போது மூடப்பட்டுள்ளது. தங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கூறி வருகிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்கிறது பேக்கரி நிர்வாகம்.
"பழைய குத்தகை ஒப்பந்தம் முடிந்ததால் நாங்கள் கடையை மூடிவிட்டோம்" என்று பேக்கரியின் மேலாளர் ராமேஸ்வர் வாக்மரே ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"கடை உரிமையாளர் அதிக வாடகை கோருகிறார், இதை கொடுப்பது எங்களுக்கு சாத்தியமற்றது. ஏற்கனவே வணிக அளவு குறைந்துள்ளது. இதில் அதிக வாடகையை எப்படி கொடுக்க முடியும். எனவே கடையை மூடிவிட்டோம். " என்றார்.
"எங்கள் பெயரை மாற்றி போராட்டக்காரர்களிடம் சரணடைய விருப்பம் இல்லை. ஏனெனில் இந்த பேக்கரி அனைத்து உரிமங்களை பெற்று நடத்தப்பட்டு வருகிறது. மற்றவர்கள் விரும்பினால் இதை தங்கள் வெற்றி என்று கொண்டாடிக்கொள்ளட்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நவம்பரில், மும்பையில் இதேபோல மற்றொரு பேக்கரி இலக்கு வைக்கப்பட்டது. சிவசேனா தலைவர் நிதின் நந்த்கோக்கர் பாந்த்ரா பகுதியில் உள்ள கராச்சி ஸ்வீட்ஸ் விற்பனை நிலையம் அதன் பெயரை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
2019ம் ஆண்டு பிப்ரவரியில், புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து சில நாட்களில், ஒரு கும்பல் பெங்களூரின் இந்திராநகரில் உள்ள கராச்சி பேக்கரி கடைக்கு வெளியே கூடி அதன் பெயரை மாற்ற கோஷமிட்டு போராட்டம் நடத்தியிருந்தது. இந்த போராட்டத்திற்குப் பிறகு, கடை ஊழியர்கள் 'கராச்சி' என்ற வாசகத்தை மறைத்து, பேக்கரி என தெரியும்படி கடையை திறந்தனர்.