பெரும் சரிவை சந்தித்த மும்பை பங்கு சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
மும்பை பங்கு சந்தை மிக மோசமான சரிவுடன் இன்று மாலை முடிந்தது.
மும்பை: மும்பை பங்கு சந்தை மிக மோசமான சரிவுடன் இன்று மாலை முடிந்தது. பல நிறுவனங்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொண்டு வந்த வரி விதிப்பு முறைகள் காரணமாகவும் உலகம் முழுக்க பங்கு சந்தையில் இன்று பெரிய இழப்பு ஏற்பட்டது. முக்கியமாக மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது.
பிஎஸ்இ சென்செக்ஸ் 1.89% அதவாது 689.60 புள்ளிகள் சரிந்து 35,742.07 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல் நிஃப்டி 1.81% சரிந்து 10,754 புள்ளியில் முடிவடைந்தது. அதுபோல் மற்ற முக்கிய பங்கு வர்த்தக புள்ளிகள் எல்லாமும் பெரிய சரிவில் முடிவடைந்தது.
ஐடி துறை, தொழில்துறை, டெலிகாம் துறை என அனைத்தும் பெரிய சரிவில் முடிந்தது. இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பும் இன்று மாலைக்கு பிறகு சரிவை சந்தித்தது. ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தற்போது 70.32 ஆக உள்ளது.
ஆனாலும் சில நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தது முடிந்தது. எச்பிசிஎல், பிபிசிஎல், கோல் இந்தியா, என்டிபிசி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் இன்று நல்ல உயர்வை சந்தித்தது. அதேபோல் விப்ரோ, அதானி போர்ட்ஸ், இந்தியன் ஆயில், யுபிஎல் ஆகிய நிறுவனங்களும் அதிக உயர்வை பெற்று முடிவடைந்தது.
இனி வரும் காலங்களில் மும்பை பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 தேர்தல் காரணமாக மத்திய அரசு நிறைய திட்டங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது. இதனால் அரசின் பண கையிருப்பு குறைய வாய்ப்புள்ளது.
இது சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். தேர்தல் காரணமாக சந்தையில் மிகவும் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.