மும்பை குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்பு... பரோலில் வந்து தலைமறைவான ஜலீஸ் அன்சாரி கைது!
Recommended Video
மும்பை: நாட்டை உலுக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு உட்பட 60 வழக்குகளில் தொடர்புடைய ஜலீஸ் அன்சாரி (வயது 68) பரோலில் வந்த நிலையில் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஜலீஸ் அன்சாரி கைது செய்யப்பட்டார்.
1993-ல் மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 250 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயமடைந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் ஜலீஸ் அன்சாரி.
2008-ம் ஆண்டு ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவம் உட்பட 60 வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர் ஜலீஸ் அன்சாரி. ராஜஸ்தானின் அஜ்மீர் சிறையில் இருந்த நிலையில் 21 நாட்கள் பரோல் விடுமுறை அவருக்கு அளிக்கப்பட்டது.
இதன்படி நாள்தோறும் மும்பையின் அக்ரிபடா காவல் நிலையத்தில் ஜலீஸ் அன்சாரி கையெழுத்திட வேண்டும். கடந்த 19 நாட்களாக காவல்நிலையத்தில் அன்சாரி கையெழுத்திட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று அன்சாரி காவல்நிலையத்துக்கு செல்லவில்லை. இதனையடுத்து அவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீஸ் வட்டாரங்களில் டாக்டர் பாம் என அழைக்கப்படுவர் அன்சாரி. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஜலீஸ் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக உத்தரப்பிரதேச போலீஸ் டிஜிபி ஓபி சிங் கூறுகையில், கான்பூரில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திவிட்டு திரும்பிய ஜலீஸ் அன்சாரியை கைது செய்தோம். தற்போது லக்னோவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார் ஜலீஸ் அன்சாரி என்றார்.