சுப்ரியா சுலே.. ரோகித் பவார் உடன் ஆதித்யா தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் திடீர் சந்திப்பு
மும்பை : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே மற்றும் ரோகித் பவார் உடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் சந் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைரான அஜித் பவார் திடீரென பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராக பதவி ஏற்றார். தேவேந்திர பட்னாவிஸ் பாஜக சார்பில் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
ஒரு நாள் இரவில் ஏற்பட்ட இந்த திருப்பம் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அஜித் பவாரின் திடீர் முடிவு மிகவும் கவலைப்பட வைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாஜகவுக்கு தங்கள் ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்ட நிலையில் அஜித் பவாருடன் சென்ற எம்எல்ஏக்களும் சரத்பவார் பக்கம் திரும்பிவிட்டனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பது பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் 30ம் தேதி வரை அவகாசம் அளித்தாலும் நாளை உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்து மெஜாரிட்டியை முதல்வர் பட்னாவிஸ் நிரூபிக்க வேண்டிய தேதி முடிவாகும் என தெரிகிறது.
இந்த சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே மற்றும் ரோகித் பவார் உடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் சந் எம்பி ஆகியோர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலான ரெனைசன்சில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.