மும்பையில் புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல்.. தவறி விழுந்து 22 வயது இளம் பெண் உயிரிழப்பு
மும்பை: மும்பையில் புறநகர் ரயிலில் கூட்ட நெரிசலால் தவறி விழுந்து 22 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை விட மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். ரயிலில் சென்றால் தான் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் செல்ல முடியும் என்பதோடு, கட்டணம் குறைவு என்பதால் மக்களுக்கு புறநகர் ரயில்கள் தான் வரப்பிரசாதம்.
மும்பை மற்றும் தானே பகுதியில் உள்ளவர்கள் புறநகர் ரயில்களில் தான் அலுவலகம் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் நேற்று காலை மும்பையை ஒட்டிய தானே மாவட்டத்தின் தொம்பி வாலி கோபூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 22 வயது இளம் பெண் தவறி விழுந்தார்.
கடும் கூட்ட நெரிசல்
அந்த பெண் கூட்ட நெரிசலால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சார்மி பிரசாத்
உயிரிழந்த பெண் குறித்து போலீசார் கூறுகையில், தொம்பிவாலியைச் சேர்ந்த இளம் பெண் சார்மி பிரசாத் (22 வயது). இவர் சிஎஸ்எம்டி- பவுண்ட் இடையே இயக்கப்படும் அதிவேக ரயிலில் காலை 9.30மணிக்கு ஏறி இருக்கிறார். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் தவறி விழுந்துள்ளார். அவரை சாஸ்திரி நகர் மக்கள் பார்த்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்து போனார். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளோம்" இவ்வாறு தெரிவித்தனர்.
தினமும் உயிரிழப்பு
இதனிடையே மும்பை புறநகர் ரயிலில் சிக்கி ஒரு நாளைக்கு 8 முதல் 10 பேர் உயரிழந்து போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தண்டவாளத்தை அபாயகரமாக கடப்பது, அஜாக்கிரதை போன்ற காரணங்களால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
தகவல் அறியும் சட்டம்
சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு 2010 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் மும்பை புறநகர் ரயில் விபத்துக்களில் கிட்டத்தட்ட 27,000 பேர் இறந்துள்ளதாக பதில் வந்துள்ளது.
1,774 சேவைகள்
இதனிடையே தினசரி மும்பையில் 1,774 சேவைகளை இயக்கும் மத்திய ரயில்வே, சனிக்கிழமையன்று அதன் கால அட்டவணையை திருத்தியது, 42 உள்ளூர் ரயில்களின் நேரத்தை மாற்றியது, மேலும் சிலவற்றை தாதருக்கு அருகிலுள்ள பரேல் டெர்மினஸுக்கு நீட்டித்தது.