ஆன்லைன் கிளாஸில் பதில் அளிக்காத மகள்.. பென்சிலால் குத்தியும் கடித்தும் ஆத்திரத்தை தீர்த்த தாய்
மும்பை: மும்பையில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு 12 வயது மகள் பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த தாய் அந்த சிறுமியை பென்சிலால் குத்தி பல இடங்களில் கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் முதல் இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 7 மாதங்களாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை.
எனினும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுத்தான் வருகின்றன. எல்கேஜி வகுப்பு முதல் காலேஜ் வரை ஆன்லைன் வகுப்புகளால் பிள்ளைகள் பாடாய்படுத்தப்படுகிறார்கள்.
பெற்றோர்
பெற்றோரும் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் ஆன்லைன் வகுப்புகளை போட்டு திணிக்கிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் புரியாமல் நிறைய மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அது போல் வீட்டில் 3 குழந்தைகள் இருந்தால் மூவருக்கும் நவீன செல்போன், இன்டர்நெட் கனெக்ஷன் ஆகியவற்றால் பெற்றோர் அவதிப்படுகிறார்கள்.
ஆன்லைன் வகுப்பு
ஒரே போனில் இரு குழந்தைகளையும் ஆன்லைன் வகுப்பை பார்க்குமாறு கூறியதால் மனமுடைந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. இப்படி மாணவர்கள்தான் புத்தி பேதலித்து போய் இருக்கிறார்கள் என்றால் பெற்றோர் அதற்கு மேல் உள்ளார்கள்.
ஆன்லைன்
மும்பையில் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு 12 வயது மகள் பதிலளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தாய் அந்த சிறுமியின் முதுகில் பென்சிலை கொண்டு குத்தியுள்ளார். அது போல் அந்த சிறுமியை பல இடங்களில் கடித்துள்ளார். 6 ஆவது படிக்கும் இந்த சிறுமி தினந்தோறும் இந்த சித்திரவதையால் அவதிப்படுகிறார்.
மும்பை போலீஸார்
இதை பார்க்க மனமில்லாத அந்த சிறுமியின் தங்கை 1098 குழந்தைகள் உதவி மையத்திற்கு போன் செய்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் என்ஜிஓ அமைப்பை சேர்ந்த இரு நபர்கள் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்ததை அடுத்து அவர் மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.