டிக்கெட் எடுக்க வந்த பெண் பயணியின் செல்போனை அமுக்கிய கிளர்க்... அப்புறம் அடிதடிதான்
எத்தனையோ செல்போன் வாங்கினாலும் அடுத்தவர்கள் வைத்திருக்கும் அழகான செல்போனை திருடுவது என்பது சிலருக்கு அலாதியான சுகம்தான். டிக்கெட் கவுண்டரில் மறந்து விட்டு போன பெண் பயணியின் செல்போனை திருடிய கிளர்க்கை
மும்பை: மும்பையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரில் புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த ஆண் ஊழியரின் பாக்கெட்டை சோதனை செய்து அதிலிருந்த செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கிளர்க்கை அடித்து துவைத்தார். இந்த சம்பவத்தைப் பார்த்து மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் அதை வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
அடிவாங்கிய அந்த நபரின் பெயர் மனோஜ் ஜெய்ஸ்வால் என்பதாகும் அவர் சீனியர் கிளர்க் ஆக டிக்கெட் கவுண்டரில் வேலை செய்கிறார். அடி வெளுத்த அந்த பெண்ணின் பெயர் நந்தினி பெலேகர். கடந்த 20ஆம் தேதி மும்பை ரயில் நிலையத்திற்கு 5 மணிக்கு தனது தோழியுடன் டிக்கெட் வாங்குவதற்காக வந்த நந்தினி அவசரம் அவசரமாக டிக்கெட்டை வாங்கிக்கொண்டு செல்போனை கவுண்டரிலேயே மறந்து வைத்து விட்டு சென்று விட்டார்.
அரைமணி நேரம் கழித்துதான் தனது செல்போனை தொலைத்து விட்டது தெரிந்தது. கடைசியாக டிக்கெட் வாங்கும் இடத்தில்தான் விட்டு விட்டு போனது அவர் நினைவுக்கு வரவே உடனே தோழியின் செல்போனில் இருந்து தனது நம்பருக்கு அழைத்தார். ஆனால் அந்த போன் போகவில்லை. அந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்று தகவல் வந்தது.
சந்தேகப்பட்ட நந்தினி உடனடியாக ரயில் நிலையம் சென்று தான் டிக்கெட் எடுத்த கவுண்டரில் இருந்த மனோஜிடம் கேட்டார். அதற்கு அவர் தான் செல்போனை பார்க்கவேயில்லை என்று பதில் சொன்னார். அவரது பேச்சும் நடவடிக்கையும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் அமைதியாகவே பேசினார் நந்தினி. ஆனாலும் மனோஜ் பிடி கொடுக்கவில்லை.
நந்தினி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். சட்டென்று கவுண்டருக்குள் புகுந்து அவரின் சட்டை பாக்கெட்டை பரிசோதனை செய்தார் அதில் நந்தினியின் செல்போன் இருந்தது. ஆனால் சிம் கார்ட் நீக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்து ஆத்திரம் அதிகரிக்கவே சட்டென்று அடி பின்னி எடுத்தார். இதை பார்த்த பிற பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ இணைய தளத்தில் வைரலானது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் மனோஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் நந்தினி காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காத காரணத்தால் அவர் கைது செய்யப்படவில்லை. சொந்தமாக எத்தனை போன் வாங்கினாலும் திருடுவது சிலருக்கு தனி ருசியாகத்தான் இருக்கும் போல.