மும்பைக்கு ரெட் அலர்ட்.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்.. முதல்வர் வேண்டுகோள்
Recommended Video
மும்பை: மும்பைக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில்,பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை எதிரொலியாக, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொடர்ந்து 5 வது நாளாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்களிலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. '
போக்குவரத்து முடங்கி உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன. கடற்படை சார்பில் மீட்புக் குழுவினர், மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தரைதளம் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது.
|
பொதுமக்கள் வெளியேற்றம்
மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று 100 மிமீ மழை பெய்துள்ளது. மழை தொடர்பான விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மிதி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், அதன் அருகிலுள்ள கிராந்தி நகர், கர்லா பகுதிகளிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
|
மழை நீர் சூழ்ந்தது
கிங் சர்க்கில், மேற்கு விரைவு சாலைகளில் தேங்கியுள்ள நீரில் வாகனங்கள் ஊர்ந்தவாறு செல்கின்றன. வகேலா பகுதியிலுள்ள காவல் நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், காவலர்கள் நாற்காலிகளின் மீதேறி நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
|
ரயில் பயணிகள் தவிப்பு
மழையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தானே ரயில் நிலையத்தில் சிக்கி தவித்து வரும் பயணிகளுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர், உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர். சியோன் ரயில் நிலையத்தில் நடைமேடை அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. காந்தி மார்கெட் பகுதியில் வீதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கடைகள் மூடப்பட்டுள்ளன.
|
முதலமைச்சர் பட்னாவிஸ் ஆறுதல்
மலாத் குடிசைப்பகுதியில் சுவர் இடிந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள், மருத்துவமனைக்கு சென்று சந்தித்து முதலமைச்சர் பட்னாவிஸ் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களுக்கு அரசு சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
|
தயாராக இருக்கிறோம்
நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். நேற்று இரவு மக்களிடமிருந்து 1600-1700 ட்வீட்கள் வந்துள்ளன. அவர்களுக்கு உடனடியாக உதவி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையுடன் தயாராக இருக்கிறோம் என்றார்.
|
மேலும் 2 நாட்களுக்கு கனமழை
வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 54 விமானங்கள் அகமதாபாத், கோவா, பெங்களூரு விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டுள்ளன. அதே சமயம் இரண்டாவது ஓடுபாதை இயங்கி வருகிறது. ஆனாலும் விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ஆகியவற்றில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.