கொரோனா வைரஸால் உயிரிழந்த இஸ்லாமியர் உடல் எரிப்பு... மும்பையில் வெடித்த சர்ச்சை
மும்பை: கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த இஸ்லாமியர் ஒருவரின் உடல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தகனம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் புறநகரான மலாத் பகுதியை சேர்ந்த 65 வயது இஸ்லாமியர் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக ஜோகேஸ்வரி கிழக்கில் உள்ள மாநகராட்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நோய் முற்றிய நிலையில் நேற்று இரவு (புதன்கிழமை) அந்த நபர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மலாத் மல்வதனி கப்ர்ஸ்தானுக்கு (அடக்கஸ்தலத்துக்கு) கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் அங்கு அவரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் வேறுவழியின்றி அருகாமையில் இருந்த இடுகாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இஸ்லாமியரின் உடல் எரியூட்டப்பட்டிருக்கிறது.
இது குறித்து உயிரிழந்தவரின் மகன் கூறுவதாவது, '' எனது தந்தையை மலாத் மல்வதனி கப்ர்ஸ்தானில் அடக்கம் செய்ய எவ்வளவோ முயன்றோம், ஆனால் முடியவில்லை. உள்ளூர் அரசியல் பிரமுகர் மற்றும் போலீஸ் ஒருவர் எடுத்துக்கூறியும் எனது தந்தையின் உடலை அங்கு அடக்கம் செய்ய அறங்காவலர்கள் அனுமதிக்கவில்லை. மேலும், கொரோனாவால் எனது தந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எனக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. எனது தந்தையின் உடலுடன் நான் மட்டுமே அமர்ந்திருந்தேன்'' என தனது தரப்பு புகாரை கூறியுள்ளார்.
இதனிடையே கொரோனா வைரஸால் உயிரிழந்தார் என்ற தகவலை யாருக்கும் தெரிவிக்காமல், மலாத் மல்வதனி கப்ர்ஸ்தான் அறங்காவலர்களுக்கு கூட தெரியப்படுத்தாமல் இறந்தவரின் உடலை அவரது குடும்பத்தினர் அங்கு கொண்டு சென்றது தவறு என்றும், கொரோனாவால் உயிரிழந்தவரை அருகாமையில் உள்ள அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்யாமல் மலாத் வரை அவர்கள் கொண்டு சென்றிருக்கார்கள் எனவும் மஹாராஷ்டிர அமைச்சர் அஸ்லம் ஷேக் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு விதித்துள்ள வழிமுறைகள் தெரிந்தும் இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் செயல்பட்ட விதத்திற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.