Exclusive: தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் வராததற்கு இது தான் காரணம்... நக்மா 'பளிச்' பதில்..!
மும்பை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மகிளா காங்கிரஸ் தேசியச் செயலாளரும், நடிகையுமான நக்மாவை காணமுடியவில்லை.
இதற்கான காரணத்தை அறிவதற்காக நக்மாவை தொடர்பு கொண்டு நாம் பேசினோம்.
அப்போது அவர் கூறியதாவது;
வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி... பாஜக அரசை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் -காங்கிரஸ்
சட்டமன்றத் தேர்தல்
''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. என்ன செய்வது எனது சூழல் அப்படி அமைந்துவிட்டது, எனது குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் நான் பொதுவிடங்களுக்கு செல்ல முடியாத நிலை உருவானது. புதுச்சேரி மகிளா காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருப்பதால் தொலைபேசி மூலம் நிர்வாகிகளிடம் பேசி அங்கு மட்டும் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்தேன்.''
குடும்ப உறுப்பினர்கள்
''இங்கு (மும்பையில்) கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. முதலில் எனது குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இப்போது நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி 15 நாட்கள் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது பரிசோதனை செய்திருக்கிறேன், அதன் முடிவு நாளை தான் கிடைக்கும் என்பதால் அப்போது தான் முடிவு எனக்கு தெரியவரும்.''
காங்கிரஸ்
''தேர்தல் நேரத்தில் இந்த முறை போல் நான் எப்போதும் இப்படி வீட்டில் இருந்ததில்லை. கொரோனா வராமல் இருந்திருந்தால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, என சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்திருப்பேன். எனவே பிரச்சாரத்துக்கு நான் வராததற்கு இது தான் காரணம்.''
விமர்சனம்
''நான் புதுச்சேரி இன்சார்ஜ் என்ற முறையில் சொல்கிறேன், அங்கு கிரண்பேடி மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசுக்கு பாஜக பல்வேறு வழிகளில் தொந்தரவு அளித்தது. எலக்டெட் கவர்மெண்ட்டுக்கு கிரண்பேடி கொடுத்த தொந்தரவால் புதுச்சேரி மக்களே அவரை வெறுக்கத் தொடங்கினர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் பின்வாசல் வழியாக புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது.''
சுகாதாரம்
''இந்தியாவின் சுகாதார அமைப்பை மத்திய பாஜக அரசு சிதைத்துவிட்டது. கொரோனா தடுப்பு பணிகளில் மத்திய அரசுக்கு எந்த திட்டமிடலும் இல்லை. கடந்தாண்டு கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கியது முதலே இதே நிலை தான்.''