Exclusive: எனது கணவர் சுயேச்சை MLA.. நான் சுயேச்சை MP.. மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் -நவ்நீத் கவுர்
மும்பை: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துள்ளதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் நடிகையும், எம்.பி.யுமான நவ்நீத் கவுர்.
மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதி மக்களவைத் தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இவர்.
இந்நிலையில் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்துக்கு எதிரான குரல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி பேசுவதற்காக மும்பை செய்தியாளர் ஒருவர் மூலம் ஒன் இந்தியா தமிழ் அவரை தொடர்புகொண்டு பேசியது.
தமிழகத்தில் இருந்து பேசுவதாக அறிந்த பின்னர் மிக உற்சாகமாக தனது கருத்தை பகிர்ந்துகொண்டார் நவ்நீத் கவுர் எம்.பி.. அதன் விவரம் பின்வருமாறு;
திராவிட வரலாறுகளை கற்றுத்தர ''திராவிடப்பள்ளி''... காணொலி மூலம் தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்..!
தற்காலிக ரத்து
''நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்திருப்பதன் மூலம் தொகுதியில் எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு எம்.பி. என்ற முறையில் என்னிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்காத போது என்னால் என்ன நன்மை செய்ய முடியும். இதனால் தான் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்துள்ளதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.''
ஊதியத்தை பிடியுங்கள்
''நேற்று முன் தினம் கூட இது குறித்துப் பேசியிருக்கிறேன். எங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை கூட பிடித்துக்கொள்ளுங்கள், அதைப்பற்றி நான் உட்பட எந்த எம்.பியும் கவலைப்படப் போவதில்லை. அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் மக்களுக்கு சென்று சேர வேண்டிய நிதியை ரத்து செய்திருப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனது குரல் நிச்சயம் அரசின் செவிகளில் விழும். ரத்து செய்யப்பட்டுள்ள தொகுதி மேம்பாட்டு நிதி விரைவில் திருப்பி வழங்கப்படும் என்ற நம்பிக்கை உண்டு''
சுயேச்சை தம்பதி
''நான் எந்தக் கட்சியையும் சேராதவள். அமராவதி மக்களவைத் தொகுதியில் இருந்து சுயேச்சையாக வெற்றி பெற்று எம்.பி.யாக இருக்கிறேன். எனது கணவரும் எந்தக் கட்சியையும் சேராத சுயேச்சை எம்.எல்.ஏ.. இந்தியாவிலேயே அரசியல் கட்சிகளில் இணையாமல் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ.வாக உள்ள ஒரே தம்பதி நாங்கள் மட்டும் தான். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் தொகுதி மேம்பாட்டு நிதி குறித்து நான் வைக்கும் கோரிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டது.''
திறமை அடிப்படையில்
''நடுநிலை தன்மையுடன் செயல்பட்டு வருபவள் நான். இதனிடையே உங்களை இணையுமாறு எந்த அரசியல் கட்சியும் அழைப்பு விடுக்கவில்லையா என ஒன் இந்தியா தமிழ் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த அவர், ''என்னையும், எனது கணவரையும் கட்சியில் இணையுமாறு அழைக்காத கட்சிகளே இல்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுத்தன. ஆனால் அப்படி இணையும் திட்டம் எங்களிடத்தில் இல்லை. பிரபலமானவர்கள், திறமையானவர்கள் நம்முடன் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் நினைப்பது தவறில்லை.''
பெண் என்ற முறையில்
மஹாராஷ்டிரா மாநில அரசுக்கும் நடிகை கங்கணா ரனாவத்துக்கும் இடையேயான மோதல் பற்றி கேட்டதற்கு பதிலளித்த நவ்நீத் கவுர், '' கங்கணா ரனாவத் ஒரு பெண் என்ற அடிப்படையில் அவர் மீது எனக்கு அனுதாபம் உண்டு. ஆனால் அதற்காக அவரின் நடவடிக்கைகள், கருத்துக்களுக்கெல்லாம் நான் ஆதரவு தெரிவிக்கமாட்டேன்.
மாநில கட்சிகள்
தமிழக அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசியலை பற்றி அவ்வளவு முழுமையாக எனக்கு எதுவும் தெரியாது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா என தென்னிந்திய மாநிலங்களை பொறுத்தவரை மக்கள் அந்தந்த மாநில கட்சிகளுக்கு ஆதரவு தருவதை காண முடிகிறது. தேசியக் கட்சிகளை விட மாநில கட்சிகள் தென்னிந்தியாவில் பலமாக உள்ளன''.