மகாராஷ்டிரா: ராஜினாமா செய்த 4 என்சிபி-காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பதவிகளை ராஜினாமா செய்த 3 தேசியவாத காங்கிரஸ் மற்றும் 1 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சி தாவல்கள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சந்தீப் நாயக், சிவேந்திரஜியே போஸ்லே, வைபவ் பிசாந்த் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிதாஸ் கோல்ம்கர் ஆகியோர் நேற்று பதவிகளை ராஜினாமா செய்தனர்.
4 பேரும் எம்.எல்.ஏக்களை பதவி ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஹர்பன் பஹ்டேவிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து இந்த 4 பேரும் இன்று பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
கட்சி தாவிய 4 பேரும் எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. சந்தீப் நாயக் தமது தந்தையான முன்னாள் அமைச்சர் கிரிஷ் நாயக் மற்றும் 57 கவுன்சிலர்களுடன் பாஜகவில் இணைந்தார். நவி மும்பையில் சந்தீப் நாயக் தனி செல்வாக்கு பெற்றவர்.
Mumbai: Former NCP leaders Shivendra Raje Bhosale, Sandeep Naik & Chitra Wagh join Bharatiya Janta Party in presence of Maharashtra Chief Minister Devendra Fadnavis. pic.twitter.com/OqSZM9g4rG
— ANI (@ANI) July 31, 2019
அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவரான மதுகர் பிசாந்தின் மகனான வைபவ் பிசாந்தும் பாஜகவில் இன்று இணைந்தார். மகாராஷ்டிரா அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான கிரிஷ் மகாஜன் ஏற்கனவே 50 பாஜக எம்.எல்.ஏக்கள் தங்கள் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை மாநகர தலைவர் சச்சின் ஆஹிர் அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிரணி தலைவர் சித்ரா வாஹ், பாஜகவில் இன்று இணைந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் பிரித்விராஜ் சவாண், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகளால் அச்சுறுத்தப்படுவதால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.