அமலாக்கத்துறை ஆபீஸ் கிளம்பிய சரத் பவார்.. ஒரே பதற்றம்..வீட்டுக்கே ஓடி வந்த கமிஷனர்.. முடிவு மாற்றம்
Recommended Video
மும்பை: நிதிமோசடி முறைகேடு தொடர்பாக மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகப்போவதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்ததால் மும்பையே போர்க்களமாக மாறியது. நாங்கள் அழைக்கும் போது வந்தால் போதும் என்றும், உங்களை அலுவலகத்திற்குள் விட மாட்டோம் என்றும் அமலாக்கத் துறை தெரிவித்தது.
சரத் பவார் அறிவிப்பையடுத்து, அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்து கோஷங்களை எழுப்பினர். எனவே அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி நிதி மோசடி வழக்கில் சரத்பவார், அமலாக்கத்துறையால், குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை அவருக்கு சம்மன் அனுப்பப்பட வில்லை என்ற போதிலும் தானாக முன்வந்து என்று மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக போவதாக சரத்பவார் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் சம்மன் இல்லாமல் ஆஜராகிய சரத்பவாரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று அமலாக்கத் துறை தெரிவித்தது. அடுத்தடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அமலாக்கத்துறையால் குறி வைக்கப்படுவதாக, குற்றச்சாட்டு வெளியாகியுள்ள நிலையில் சரத்பவார் இதில் ஒருபடி முன்னே சென்று, தானாகவே ஆஜராக போவதாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.
எனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மும்பை அமலாக்க பிரிவு அலுவலகத்துக்கு வெளியே கூடிய மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப ஆரம்பித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, 144 தடை உத்தரவை பிறப்பித்தது மும்பை காவல்துறை. அந்த பகுதியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். தடை உத்தரவு தெற்கு மும்பையில் முழுமைக்கும் நீட்டிக்கப்பட்டது.
இதேபோல, கோலாப்பூர், பாராமதி மற்றும் ஹிங்கோலியில், என்.சி.பி தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தினர். பாரமதியின் பெரும்பாலான சந்தைகள் மூடப்பட்டிருந்தன. நேற்று, பவார் ஒன்றன் பின் ஒன்றாக ட்வீட் செய்து, அதில் தனது கட்சியினர் அமைதிகாக்க வேண்டுகோள்விடுத்தார். இருப்பினும் தொண்டர்கள் அமைதி இழந்தனர்.
இதையடுத்து, மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பர்வே, சில்வர் ஓக் பகுதியிலுள்ள, சரத் பவார் வீட்டுக்கு, நேரில் சென்று, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நீங்கள் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், அந்த முடிவை கைவிடுங்கள் என கோரினார். அப்போது, இணை கமிஷனரும் உடனிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட கூடாது என்பதால், தனது முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
இதனால், மும்பையில், மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.