டிசம்பர் முதல், 24 மணி நேரமும் வங்கி கணக்கிலிருந்து ஆன்லைனில் பணம் அனுப்பலாம்.. ஆர்பிஐ அதிரடி
மும்பை: என்ஜிஎப்டி எனப்படும் ஆன்லைன் பணம் செலுத்தும் வசதி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய நிதிக் கொள்கை இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ரெப்போ ரேட்டை 35 சதவீதம் குறைப்பதான அறிவிப்பு முக்கியமானதாகும். ஆசிய நாடுகளிலேயே, வேறு எந்த மத்திய வங்கியையும்விட குறைவான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.
ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளாக குறைக்க டாக்டர் ரவீந்திர எச்.தோலக்கியா, டாக்டர் மைக்கேல் தேபப்ரதா பத்ரா, பிபு பிரசாத் கானுங்கோ மற்றும் சக்தி காந்தா தாஸ் ஆகியோர் வாக்களித்தனர், இரண்டு உறுப்பினர்கள் (டாக்டர் சேதன் காட் மற்றும் டாக்டர் பாமி துவா) ரெப்போ வீதத்தை 25 அடிப்படை புள்ளிகளாக குறைக்க வாக்களித்தனர்.
மந்தமான பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே, ரிசர்வ் வங்கி இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க துவங்கியுள்ளது. அதில் மற்றொரு அறிவிப்பு என்பது, தேசிய எலக்ட்ரானிக் பண்ட்ஸ் டிரான்ஸ்பர் எனப்படும் என்இஎப்டி பற்றியது.
தற்போது, காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரைதான், NEFT மூலமாக பணத்தை அனுப்ப முடியும். அதற்கு இடைப்பட்ட காலத்தில், பணம் அனுப்ப முடியாது. வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும், NEFT வாயிலாக பணம் அனுப்ப முடியும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இதன் மூலம், ரீட்டெயில் வணிகத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என்று ஆர்பிஐ நம்புகிறது. மேலும், ரிசர்வ் வங்கி 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7% என்ற இலக்கிலிருந்து 6.9% என்ற இலக்கிற்கு குறைத்துள்ளது.