மும்பையில் இரவு 11மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை - 35ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
மும்பையில் இரவு 11மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. பெருநகரம் முழுவதும் 35 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மும்பை மாநகர காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை: இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 11 மணிக்கு முன் முடிக்கப்பட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்ட ஒழுங்கை பாதுகாக்க வீதிகளில் 35 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் நகரம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பையில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக இரவு 11 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டம்
மும்பையில் ஆண்டு தோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். நள்ளிரவு நேரங்களில் அங்குள்ள கேட்வே ஆப் இந்தியா, கிர்காவ், ஜூகு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகளவில் திரண்டு புத்தாண்டை கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 5 வரை லாக் டவுன்
கொரோனா பரவலை தடுக்கவும், இங்கிலாந்தில் உருவான புதுவகையான கொரோனா பரவலை தடுக்கவும், மகாராஷ்டிராவில் மும்பை உள்பட மாநகராட்சி பகுதிகளில் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு இரு தினங்களே உள்ளதால் காவல்துறையினர் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
11 மணிக்கு மேல் தடை
செய்தியாளர்களிடம் பேசிய மும்பை போலீஸ் துணை ஆணையர் விஸ்வாஸ் நாங்ரே பாட்டீல், இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு 11 மணிக்கு முன் முடிக்கப்பட வேண்டும். விதிகளை மீறுபவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இரவு நேர ரோந்து பணி
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்ட ஒழுங்கை பாதுகாக்க வீதிகளில் 35 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஓட்டல்கள், உணவகங்கள், பார்கள், கேளிக்கை இடங்களை இரவு 11 மணி சரியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதி கிடையாது
இரவு நேர ஊரடங்கை மீறி பொது மக்கள் கேட்வே ஆப் இந்தியா, மெரின் டிரைவ், கிர்காவ் கடற்கரை, ஜூகு, கோராய், மத் ஐலண்டு போன்ற இடங்களில் புத்தாண்டை கொண்டாட மாலை வேளையில் 4 பேருக்கு கீழ் சிறு சிறு குழுவினராக வர வாய்ப்பு உள்ளது. ஆனால் கூட்டமாக கூடுவதற்கு அனுமதி கிடையாது. எனவே அதை தடுக்கும் வகையில் அந்த பகுதிகளில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
புத்தாண்டு கொண்டாட தடை
இதேபோல இந்த ஆண்டு படகு மற்றும் வீடுகள், அபார்ட்மெண்ட்களின் மொட்டைமாடிகளில் புத்தாண்டு கொண்டாடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கு விதிகளின் கீழ் குடும்பத்தினரோ அல்லது 4 பேருக்கு கீழ் வெளியே வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
பலத்த பாதுகாப்பு
புத்தாண்டில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க ஈவ்-டீசிங் தடுப்பு குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளில் சாதாரண உடையில் பணியில் இருப்பார்கள். மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் அச்சுறுத்தலுக்கு ஏற்ற வகையிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யவும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நகரின் முக்கிய சாலைகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள் எனவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.