மும்பையில் 3 நாள் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று- மருத்துவமனை நிர்வாகம் மீது புகார்
மும்பை: மும்பையில் பிறந்து 3 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா பாதித்தவர் பயன்படுத்திய படுக்கையையே பிரசவ வார்டிலும் மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்தியதாலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழப்பும் அதிகம் இருந்து வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் செம்பூர் பகுதியில் 3 நாட்களுக்கு முன் பிறந்த ஆண் குழந்தைக்கும் அக்குழந்தையின் தாயாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இது அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதித்த ஒருவர் பயன்படுத்திய படுக்கையையே பிரசவ வார்டிலும் மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்தியதாலேயே இப்பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது உறவினர்களின் புகார். மேலும் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் மருத்துவர்கள் உரிய முறையில் பரிசோதனை எதுவுமே அளிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டையும் உறவினர்கள் முன்வைத்திருக்கின்றனர்.
இது மகாராஷ்டிராவில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.