மும்பையில் நேற்று இரவு திடீர் வாயுக்கசிவு.. பொதுமக்கள் பீதி.. பரபரப்பு
மும்பை: மும்பையில் நேற்று நள்ளிரவு திடீரென வாயு கசிவு ஏற்பட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
மும்பை மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளாக செம்பூர், சாக்காலா, கோரக்கியான், அந்தேரி, போரிவாலி உள்ளிட்ட பகுதிகிளில் நேற்று இரவு வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இது தொடர்பாக மும்பை மாநகரம் முழுவதும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவின.
சமூக வலைதளத்தில் பரவிய தகவலின் படி, மும்பையின் பவாய் தொடங்கி மிரா சாலை வரை வாயு கசிவு ஏற்பட்டது என்றும் 40 நிமிடங்களுக்கு மேல் வாயு கசிவு ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது. இதனால் மும்பை மாநகரம் முழுவதும் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த வாயு கசிவு தொடர்பாக மும்பை போலீசாருக்கு போவாய், செம்பூர், சாக்காலா, கோரக்கியான், பகுதிகளில் இருந்து புகார்கள் வந்தது. இதையடுத்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இரவு 10.40 மணி அளவில் தீயணைப்பு வீரர்களை வாகனங்களுடன் தகவல் வந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் எங்கிருந்து வாயு வருகிறது என்பதை அறிய பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அப்படி வாயு கசிவு எங்கிருந்தும் வந்ததாக தெரியவில்லை.
இதையடுத்து வாயு கசிவு என்பது வதந்திதான் என்பது தெரியவந்தது. இந்த வாயு கசிவு பிரச்சனை காரணமாக நேற்று இரவு மும்பையில் பெரும் பீதி ஏற்பட்டது.