கண் பகுதி மிக வேகமாக வருகிறது.. நிசார்கா புயலால் மும்பைக்கு காத்திருக்கும் ஆபத்து.. என்ன நடக்கும்?
மும்பை: நிசார்கா புயலில் கண் பகுதி இன்று மதியம் மும்பைக்கு அருகே வரும் என்பதால் அங்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Recommended Video
கொரோனா பாதிப்பிற்கு இடையே இந்தியாவை தாக்கிய ஆம்பன் புயலை தொடர்ந்து அடுத்த புயல் இந்தியாவை தாக்க உள்ளது. அரபிக் கடலில் உருவாகி உள்ள நிசார்கா புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை தாக்க உள்ளது .
நிசர்கா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 110 கிமீ வேகத்தில் மும்பை அருகே புயல் கரையை கடக்கும் என்கிறார்கள்.
பெரும் அலறல் சத்தம்.. கவனமாக இருங்க.. நிசார்கா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது என்ன?
மும்பை அருகே
மும்பைக்கு அருகே இன்று மதியம் புயல் கண் பகுதி இருக்கும்.இதனால் அங்கு அதிக வேகமாக காற்று வீசும். அப்போது 110 கிமீ/ நேரம் வேகம் வரை காற்று வீசும்.இந்த புயலின் கண் பகுதி மிகவும் வலிமையாக இருக்கிறது. பொதுவாக இந்த கண் பகுதிதான் புயலில் அதிகமான சேதத்தை ஏற்படுத்தும். இந்த கண் பகுதி எந்த அளவிற்கு சிறியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வேகமான காற்று வீசும்.
அளவு குறைவு
தற்போது இந்த புயலின் கண் பகுதியின் அளவு வேகமாக குறைந்துள்ளது. இது முதலில் 70 கிமீ சுற்றளவு இருந்தது. தற்போது வெறும் 65 கிமீ சுற்றளவு என்ற அளவிற்கு மாறியுள்ளது. இதனால் தற்போது இந்த புயல் புதிய வேகம் எடுத்து வலிமை அடைந்து இருக்கிறது. இதனால் புயல் மொத்த வேகம் 85 கிமீ/ நேரம் என்பதில் இருந்து 110 கிமீ/ நேரம் என்ற அளவிற்கு மாறியுள்ளது.
கண் பகுதி தாக்கும்
பொதுவாக ஒரு புயலில் கண் பகுதி எந்த இடத்தை தாக்குகிறதோ அங்குதான் சேதம் அதிகமாக இருக்கும். பெரிய அளவில் மரங்கள் விழும். இந்த பகுதியை பொறுத்தே புயலின் வேகம் நிர்ணயிக்கப்படும். தற்போது நிசார்கா புயலின் கண் பகுதி மும்பைக்கு அருகே வருகிறது. பொதுவாக இதுபோல கண் பகுதி பெரிய நகரங்களை நேரடியாக தாக்காது, மும்பை இப்படி ஒரு தாக்குதலுக்கு இன்று தயார் ஆகிறது.
நிசார்கா புயல் எப்படி
இந்த நிலையில் நிசார்கா புயல் காரணமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பெரிய அளவில் சேதங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 11 மணிக்கு பிறகு மும்பையில் இந்த புயல் காரணமாக சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அங்கு 11 மணிக்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்யும். இந்த புயல் காரணமாக மகாராஷ்டிராவின் கடலோர பகுதிகள் எல்லாம் மிக மோசமாக பாதிக்கப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.