வண்டியை விற்று செலுத்தும் அளவுக்கு அபராதத்தை உயர்த்திட்டீங்களே.. நிருபர்கள் கேள்வி.. கட்கரி பதில்
மும்பை: போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் கடுமையான அபராத உயர்வுகள் குறித்து முதல்முறையாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.
அரசு ஏன் கடுமையான அபராதம் விதித்துள்ளது என்று அவர் விளக்கினார். அபராத வரம்பை அதிகரிக்க அரசுக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறினார்.
நிருபர்களிடம் டெல்லியில் கட்கரி இன்று பேட்டியளித்தார். அப்போது, மேலும் கூறுகையில், மக்களின் வாழ்க்கை பணத்தை விட மதிப்புக்குரியது. போக்குவரத்து விதி மீறல் வழக்கில் அபராதம் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரொம்ப கொடுமை.. உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தபோதே பலியான பிரபல பாடகர்.. திக், திக் காட்சி
ஆலோசனை
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அரசு அபராதம் விதிக்கத் தொடங்கியதிலிருந்து, விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. 7 வெவ்வேறு அரசியல் கட்சிகளின் அரசுகளை கொண்ட 20 மாநிலங்களின் போக்குவரத்து அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மோட்டார் வாகன திருத்தச் சட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற, கூட்டுக் குழு மற்றும் நிலைக்குழுவிடமிருந்தும் பரிந்துரைகள் கோரப்பட்டன.
புள்ளி விவரம்
நாட்டில் ஆண்டுக்கு, சுமார் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன, இதில் 1.5 லட்சம் வழக்குகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 18 முதல் 35 வயதுடையவர்கள்தான் இதில் 65 சதவீதம் பேராகும். அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டாமா? கடுமையான தண்டனை விதிக்க அரசுக்கு முழுமனதாக விருப்பம் இல்லை.
அபராதம் செலுத்த வேண்டாம்
அபராதமே செலுத்தாமல் வாகனம் ஓட்டும் அளவுக்கு அனைவரும் விதிமுறைகளை மதிக்கும் காலகட்டம் வர வேண்டும். இதைத்தான் அரசு விரும்புகிறது. இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார். மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1ம் தேதி, நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதிக அபராதம்
புதிய விதிமுறைப்படி, சீட் பெல்ட் பயன்படுத்தாததற்கு அபராதம் ரூ .1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இது 100 ரூபாயாக இருந்தது. ரெட் லைட் ஜம்ப் செய்தால் முன்பு அபராதம் 1000 ரூபாய். இப்போது 5000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். குடிபோதையில் வாகனம் ஓட்டிய முதல் குற்றத்திற்கு 6 மாத சிறைத்தண்டனையும், ரூ .10,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக அவர்கள் தவறு செய்தால், அவர்கள் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .15,000 வரை அபராதமும் செலுத்த வேண்டும். குர்கானில், 15 ஆயிரம் விலையுள்ள ஒரு ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றவருக்கு 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தை கடந்த சில நாட்கள் முன்பு இந்த நாடு பார்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.