சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் தேவை இல்லை.. குழப்பத்தில் மகாராஷ்டிரா ஆளும் கூட்டணி!
மும்பை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மகாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை என்று அம்மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவருமான அஜித் பவார் கூறியுள்ளார்.
சி.ஏ.ஏ.வை எதிர்த்து கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரையில் சி.ஏ.ஏ.வை எதிர்ப்பதில் ஆளும் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணியில் இருவித கருத்துகள் உள்ளன.
சி.ஏ.ஏ.வை லோக்சபாவில் சிவசேனா ஆதரித்தது. இதற்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து ராஜ்யசபாவில் சி.ஏ.ஏ. மீதான வாக்கெடுப்பில் சிவசேனா பங்கேற்கவில்லை. மகாராஷ்டிராவில் சிவசேனா வெளியேறியதால் பாஜகவின் கூட்டணியில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா இடம்பிடித்திருக்கிறது. அக்கட்சி சி.ஏ.ஏ.வை ஆதரிக்கிறது.
இதனால் சிவசேனா, சி.ஏ.ஏ. விவகாரத்தில் ஊசலாட்ட நிலையில்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது:
சி.ஏ.ஏ., என்.பி.ஆரால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. சி.ஏ.ஏ.வால் மகாராஷ்டிராவில் யாருக்கும் பிரச்சனை வராது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உறுதியளித்திருக்கிறார். இது தொடர்பாக எங்கள் கூட்டணியில் நாங்கள் விவாதித்தும் இருக்கிறோம்.
தற்போதைய நிலையில் சி.ஏ.ஏ.வை எதிர்த்து மகாராஷ்டிரா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை. பீகாரைப் பின்பற்றி என்.ஆர்.சி.க்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. சி.ஏ.ஏ. குறித்து மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
கூட்டணி கட்சிகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் குழப்பம் கொள்ள வேண்டாம். மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி தொடரும். மகாராஷ்டிராவுக்கு பாஜக தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. மும்பையில் இருந்து ஜவஹர்லால் நேரு துறைமுக திட்டத்தை குஜராத்துக்கு மாற்றிவிட்டனர்.
வைரசந்தையையும் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு மாற்றிவிட்டனர். ஏர் இந்தியாவின் தலைமையகத்தையும் டெல்லிக்கு மாற்றி உள்ளனர். இப்போது ஏர் இந்தியாவையே விற்பனை செய்ய உள்ளனர். இவ்வாறு அஜித் பவார் கூறினார்.