பிரதமரிடம் உதவி கேட்ட தாய்.. கவனித்த ஐபிஎஸ் அதிகாரி! உதவிய ரயில்வே, வீடு தேடி வந்த 20லிட்டர் பால்
மும்பை: ஆடு, மாடு மற்றும் எருமை பால் ஆகியவை சாப்பிட முடியாமல் ஒவ்வாமை மற்றும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மூன்றரை வயது குழந்தைக்கு ஒட்டகப்பால் வேண்டும் என்று ஒரு தாய் பிரதமருக்கு ட்வீட் செய்த நிலையில், 20 லிட்டர் ஒட்டகப் பாலை மும்பையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு ரயில்வே அதிகாரிகள் நேரில் சென்று வழங்கினர். .
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட பல பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அப்படி பாதிக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த ரேணு குமாரி என்பவர் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் தனது மகனின் நிலை குறித்து வேதனையுடன் கடந்த 4ம் தேதி எடுத்துக்கூறினார்.
ஒட்டக பால் வேண்டும்
அந்த ட்விட்டில் "ஐயா எனக்கு ஆட்டிசம் மற்றும் கடுமையான உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தை உள்ளது. என் குழந்தை ஒட்டக பால் மற்றும் குறைந்த அளவு பருப்பு வகைகளில் உயிர் பிழைக்கிறான். அவனுக்கு ஒட்டக பால் அல்லது ஒட்டக பால் பவுடரை ராஜஸ்தானிலிருந்து பெற எனக்கு உதவுங்கள், "என்று அந்த பெண் கூறியிருந்தார்.
போக்குவரத்து இல்லை
இதை பார்த்த ஐபிஎஸ் அதிகாரி போத்ரா, ராஜஸ்தானை தளமாகக் கொண்ட நாட்டில் ஒட்டக பால் பொருட்களின் முதல் பிராண்டான அட்விக் ஃபுட்ஸ்ஸைத் தொடர்பு கொண்டு குழந்தைக்கு ஒட்டக பால் பொடியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த நிறுவனமும் குழந்தைக்கு ஒட்டக பால் பொடியை வழங்கியது. இருப்பினும், அதை மும்பைக்கு அனுப்புவதுதில் பிரச்சினையாக இருந்தது. ஏனெனில் நாடு முழுவதும் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளதால் பார்சலை கொண்டுவருவதில் சிக்கல் நீடித்தது.
வீடு தேடி சென்ற பால்
இந்நிலையில் ஐ.பி.எஸ் அதிகாரி போத்ராவின் ட்வீட்டை பார்த்த வட மேற்கு ரயில்வே அதிகாரிகள் குழந்தைக்கு உதவி செய்ய முன்வந்தனர். இதன்படி மும்பை வழியாக இயக்கப்படும் சரக்கு ரயில் மூலம் 20 லிட்டர் பால் தயாரிக்கப் பயன்படும் பால் பவுடரை மும்பைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். இறுதியாக ஒட்டக பால் நேற்று முன் தினம் இரவு மும்பை கொண்டுவரப்பட்டு அது ரேணுவின் வீட்டிற்கே சென்று நேரடியாக வழங்கப்பட்டது.
எப்படி பால் சென்றது
இது தொடர்பாக தலைமை பயணிகள் ரயில் போக்குவரத்து வடமேற்கு ரயில்வே (NWR) மேலாளர் தருண் ஜெயின் கூறுகையில். "இது குறித்து போத்ரா ட்வீட் செய்தபோது இந்த விஷயம் எங்கள் கவனத்திற்கு வந்தது. மூத்த டி.சி.எம்., அஜ்மீர், மகேஷ் சந்த் ஜுவாலியாவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதித்தேன். பார்சலை சரக்கு ரயில் மூலம் அனுப்ப முடிவு செய்தோம். மும்பையில் லூதியானா மற்றும் பாந்த்ரா இடையே இயங்கும் ரயிலை ராஜஸ்தானின் ஃபால்னா நிலையத்தில் நிறுத்தினோம். அங்கு சரக்கு ரயில்கள் நிறுத்தம் இல்லை என்றாலும் நிறுத்தி பாலை எடுத்துச்சென்றோம். பால்னாவில் இருந்து மும்பையில் உள்ள பெண்ணுக்கு வழங்கப்பப்பட்டது .
|
முடிந்தவரை உதவுவோம்
அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகு, ரயில் நிறுத்தப்பட்டு, ஒட்டக பால் பாந்த்ராவில் இருந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இந்திய ரயில்வேயில் எங்களைப் பொறுத்தவரை, இது வணிக ரீதியான லாபங்களைப் பார்க்க வேண்டிய நேரம் அல்ல. எங்களால் முடிந்த வழியில் எங்கு வேண்டுமானாலும் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். எங்கள் (NWR) ரயில்கள் நாட்டின் 18 மாவட்டங்களில் ஓடுகின்றன, மக்களுக்கு உதவ தேவையானதை நாங்கள் செய்துள்ளோம்"என்று ஜெயின் கூறினார்.
ஐபிஎஸ் அதிகாரி நன்றி
இந்நிலையில் "20 லி. ஒட்டக பால் நேற்று இரவு ரயிலில் மும்பை சென்றடைந்தது. குடும்பத்தினர் அதன் ஒரு பகுதியை நகரத்தில் உள்ள மற்றொரு ஏழை நபருடன் பகிர்ந்து கொண்டனர். பார்சலை எடுப்பதற்கு திட்டமிடப்படாத நிறுத்தத்தை உறுதி செய்த வடமேற்கு ரயில்வே அதிகாரி. எஸ். தாருன் ஜெயினுக்கு நன்றி "என்று போத்ரா மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இதனிடையே புவனேஷ்வரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் வடமேற்கு ரயில்வே நிர்வாகத்தின் செயலை பலரும் பலரும் ட்விட்டரில் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் ரயில்வேயின் செயலை புகழ்ந்துள்ளார்.