போர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாக். ஐஎஸ்ஐ-க்கு கடத்திய மகா. ஹெச்.ஏ.எல். ஊழியர் கைது
மும்பை: இந்திய போர் விமானங்கள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பாக ஐ.எஸ்.எஸ்.க்கு விற்றதாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஊழியர் தீபக் ஶ்ரீசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் நாசிக் அருகே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் போர் விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இது 1964-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இங்குதான் மிக் 21FL போர்விமானம் , K-13 ஏவுகணைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. மிக் உள்ளிட்ட போர் விமானங்களுக்கு இங்குதான் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வந்தன. இந்த நிறுவனத்தில் உதவி மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் தீபக்.
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பாகிஸ்தானின் உளவு நிறுவனத்துடன் தீபக்குக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.
இதில் போர் விமானங்கள் தொடர்பான ரகசிய தகவல்களை சமூக வலைதளங்கள் வழியாக பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தீபக் கடத்தியது உறுதியானது.
இதையடுத்து தீபக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4 சிம்கார்டுகள், 2 மெமரி கார்டுகள், 3 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.