ஊரே திரண்டது.. 2 சாமியார் உட்பட 3 பேர் உருட்டு கட்டைகளால் அடித்தே கொலை.. அதிர்ச்சியில் மகாராஷ்டிரா
மும்பை: மும்பை நகரத்திலிருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவுதான். மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் அது. பெயர் கட்சின்சலே. 100க்கும் மேற்பட்ட கும்பல் சேர்ந்து, 2 சாமியார்கள் உட்பட, மூன்று பேரை கம்புகளாலும், கட்டைகளாலும் அடித்தே கொலை செய்துள்ள பயங்கர சம்பவம் அங்கு நடந்துள்ளது.
கிட்னி திருட்டு மற்றும் குழந்தைகளை கடத்திச் செல்ல அவர்கள் வந்துள்ளதாக பரவிய ஒற்றை வதந்திதான் இத்தனைக்கும் காரணம். வியாழக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம் இப்போது வீடியோவாக வெளியே வந்து நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் டீம் அங்கே விரைந்து சென்று, நிலைமையை சரி செய்ய முயன்றுள்ளது. ஆனால் முடியவில்லை.
கம்பு, கற்கள்
70 வயதான முதியவரையும், மேலும் 2 பேரையும் மட்டும் போலீசாரால் காப்பாற்ற முடிந்தது. 2 சாமியார்கள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தின் டிரைவர் கட்டையாலும், கற்களாலும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்றில் "ஓய், இஸ்கோ மாரோ (ஏய், அவரை அடியுங்கள்)" என்று அந்த கும்பல் கூச்சலிடுவதைக் கேட்க முடிகிறது.
போலீசால் முடியவில்லை
70 வயதான முதியவர், வன்முறை கும்பலால் சூழப்பட்டு தலையில் ரத்தப்போக்குடன் உயிரை காப்பாற்ற கெஞ்சுவதையும்,, போலீஸ்காரர் ஒருவர் அடிப்பவர்களை தடுக்க முயன்றும் முடியாததால், வேடிக்கை பார்த்ததும் அந்த வீடியோவில் உள்ளது. இதையடுத்து அந்த முதியவர் அடித்தே கொல்லப்பட்டார்.
போலீஸ் வண்டியும் தப்பவில்லை
போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடிகளை, கிராமவாசிகள் முறையாக உடைப்பதை இரண்டாவது வீடியோ காட்டுகிறது. போலீஸ் வாகனம் உருட்டி தள்ளப்பட்டது இன்னொரு வீடியோவில் பதிவாகியுள்ளது. இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவர்கள் காரில் சென்றனர். ஆனால் கிராமவாசிகள், திருடர்கள் என சந்தேகித்து அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
சிறுவர்களும் கைது
இந்த நிலையில், மூன்று பேரைக் கொன்றது தொடர்பாக 9 சிறுவர்கள் உட்பட 110 பேரை பால்கர் போலீசார் கைது செய்துள்ளனர். ஏப்ரல் 30 வரை 101 பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 9 பேர் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
"இந்த வழக்கில் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 9 பேர் சிறார். 101 பேர் 30ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், 9 பேர் சிறார் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது. " என்று பால்கர்க் காவல்துறை ட்வீட் செய்துள்ளது.
|
பாஜக வலியுறுத்தல்
படுகொலை செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பால்கரில் நடந்த சம்பவம் ‘அதிர்ச்சியூட்டுகிறது, மனிதாபிமானமற்றது' என்று முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கண்டித்துள்ளார். உயர்மட்ட விசாரணைக்கு பாஜக கோரிக்கைவிடுத்துள்ளது. இந்த குற்றத்தின் பின்னணியில் வேறு காரணம் இருக்கலாம் என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் கூறினர். மூவரையும் கொல்லும் நோக்கில் கும்பல் செயல்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.