மகாராஷ்டிரா பாஜகவுக்கு குட்பை... சிவசேனாவில் ஐக்கியமாகிறாரா பங்கஜா முண்டே?
மும்பை: மகாராஷ்டிராவில் முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே பாஜகவில் இருந்து விலகி சிவசேனாவில் ஐக்கியமாகக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தமது உறவினரான என்சிபியின் தனஞ்ஜெய் முண்டேவிடம் தோல்வியைத் தழுவினார் பங்கஜா முண்டே. தமது தோல்விக்கு பாஜகவினரே காரணம் என கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் பங்கஜா முண்டே என கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 12-ந் தேதி ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறேன். அதில் எதிர்காலம் என்ன என்பது குறித்து முடிவு செய்யப்படும் என பூடகமாக பதிவிட்டிருந்தார்.
100 நாட்களை தாண்டிய ப சிதம்பரத்தின் கைது. இதுவரை நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
இது மகாராஷ்டிரா பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. பங்கஜா முண்டேவின் தந்தையும் மறைந்த பாஜக மூத்த தலைவருமான கோபிநாத் முண்டேவின் பிறந்த நாள் டிசம்பர் 12. அன்றைய தினம் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவித்திருக்கிறார் அவர்.
பாஜகவுக்கு குட்பை?
பாஜக மீதான அதிருப்தி என்பதாக இந்த அறிவிப்பில் பங்கஜாமுண்டே வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று தமது சமூக வலைதள பக்கங்களில் பாஜக தொடர்பான அடையாளங்களை பங்கஜா முண்டே நீக்கி உள்ளார். இதனால் பாஜகவில் இருந்து பங்கஜா முண்டே விலகக் கூடும் என்றே கூறப்படுகிறது.
பாஜக தலைவர் மறுப்பு
மகாராஷ்டிரா அரசியலில் தற்போது பங்கஜா முண்டே விவகாரம்தான் பரபரப்பாக பேசப்படுகிறது. மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பங்கஜா முண்டே சிவசேனாவில் இணைய உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றார்.
சிவசேனா விளக்கம்
அதேநேரத்தில் சிவசேனாவின் எம்.எல்.ஏ. அப்துல் சத்தார் கூறுகையில், பங்கஜா முண்டே எந்த கட்சியில் இணைவது என்பதை டிசம்பர் 12-ந் தேதி முடிவு செய்ய உள்ளார். அவர் சிவசேனாவில் இணைந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். பால் தாக்கரேவும் கோபிநாத் முண்டேவும் மிகவும் நல்லுறவுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் என்றார்.