ஏப்ரல் 1 முதல் உயரப்போகிறது பெட்ரோல், டீசல் விலை.. மேட்டர் இதுதான்!
மும்பை: ஏப்ரல் 1ம் தேதி முதல், பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதை இந்தியன் ஆயில் கார்பொரேஷன் உறுதி செய்துள்ளது.
நாட்டின் பிஎஸ்-6 மாசுகட்டுப்பாடு விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. புதிதாக உற்பத்தியாகும், வாகனங்களும் அதற்கேற்பத்தான், இன்ஜினை ரீஃபைன் செய்து மாற்ற வேண்டியது கட்டாயம். ஏற்கனவே வாகன உற்பத்தியாளர்கள் இந்த தொழில்நுட்பத்துக்கு மாற்றிக் கொண்டனர்.
டீசல் வாகனங்களில் புகை அதிகம் வரும். எனவேதான், முன்னணி கார் உற்பத்தி நிறுவமான மாருதி சுசுகி, இனிமேல் பெட்ரோல் வாகனங்களை மட்டுமே தயாரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது ஒருபக்கம் என்றால், பெட்ரோல், டீசலை சுத்தப்படுத்தி, அவற்றில் இருந்து புகை வெளியாகும் அளவை குறைக்கும் நடவடிக்கையும் துவங்கியுள்ளது.
இதற்காக, ஐஓசி, குறைந்த சல்பர் டீசல் மற்றும் பெட்ரோலை உற்பத்தி செய்வதற்காக, அதன் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த 17,000 கோடி ரூபாய் செலவிட்டதாக நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் செய்தியாளர்களிடம் இன்று, தெரிவித்தார்.
ஏப்ரல் 1 முதல் எரிபொருட்களின் சில்லறை விலையில் ஓரளவு அதிகரிப்பு இருக்கும், அப்போது நாடு முழுவதும் தூய்மையாக்கப்பட்ட, எரிபொருட்களில் இயங்கும், இதில் சல்பர் உள்ளடக்கம் 10 பிபிஎம் மட்டுமே இருக்க வேண்டும். தற்போது சல்பர் உள்ளடக்கம், 50 பிபிஎம் என்ற அளவில் உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. மார்ச் இறுதிக்குள் ரூ 30-க்கு மூலிகை பெட்ரோல்.. ராமர் பிள்ளை
இந்த பணிகளினால் எரிபொருள் விலை உயரும். ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நுகர்வோரை கடுமையாக பாதிக்கும் அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்த மாட்டோம். இவ்வாறு சஞ்சீவ் சிங் கூறினார்.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCகள்) தங்கள் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த 35,000 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன, அவற்றில், ரூ.17,000 கோடியை ஐ.ஓ.சி மட்டுமே செலவிட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால், கச்சா எண்ணை விலை குறைந்தது. கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3-4 வரை குறைந்தது. ஆனால், இந்தியாவில் கொண்டுவரப்படும் புதிய விதிமுறையால், மீண்டும் எரிபொருள் விலை எகிறப்போகிறது போல.