முதல்வர் போனுக்கே இந்த கதியா.. இஸ்ரேல் நிறுவனத்திற்கு தொடர்பு? மகாராஷ்ரா அரசியலில் புயல்
மும்பை: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட முக்கிய எதிர்க் கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் முந்தைய, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொண்டது சிவசேனா. ஆனால் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது சிவசேனா.
அந்த கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே, சரத்பவார் மற்றும் சிவசேனா முக்கியத் தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அக்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
|
சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு தகவலில், ஒரு பாஜக தலைவரை என்னிடத்தில் இதைப் பற்றி சொன்னார். அதற்கு நான் அவரிடம் எனது உரையாடல்களை யார்வேண்டுமானாலும் இலவசமாக கேட்டுக்கொள்ளலாம். நான் பால் தாக்கரேவின் பக்தன். எனவே எதையும் நான் மறைத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
இப்போதும் ஒட்டுக்கேட்பு
இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்ல.., தேர்தலுக்குப் பிறகு இப்பவும் கூட இவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சிவசேனா குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
சரத் பவார் பாதுகாப்பு
அந்த கட்சியின் நவாப் மாலிக் இது தொடர்பாக கூறுகையில், சரத்பவாருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக யாருமே பணிக்கு வரவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த ஒரு அறிவிப்பும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர், சரத்பவார் மீதான தங்கள் கோபத்தை இப்படி காட்டிக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன், என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
இஸ்ரேல் தொடர்பு
கடந்த வருடம் அக்டோபர் மாதம், இஸ்ரேலை சேர்ந்த என்ஜிஓவின் பேகாசஸ் என்ற சாப்ட்வேர் மூலம் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டது. உலகம் முழுக்க 1400 பேர் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்பட்டது. இந்தியாவில் 121 பேர் பாதிக்கப்பட்டனர். மகாராஷ்டிர அரசியல் பிரமுகர்கள், போனும் இஸ்ரேல் நிறுவனத்தால் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இஸ்ரேலுக்கு எந்தெந்த அதிகாரிகள் சென்றனர் என்ற ஆய்வு நடந்து வருகிறதாம்.