370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. அந்த மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பொதுநலம்
இன்று பார்லி நகரில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசியதாவது:- "இன்று, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பாஜக-சிவசேனா கூட்டணி அரசின் பின்னால் இருப்பதற்கு கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட கடின உழைப்பால் தான் காரணம். ஒருபுறம், தற்போதைய எங்கள் அரசாங்கத்தின் பணிகளும் நெறிமுறைகளும் இங்கு உள்ளது, மறுபுறம் காங்கிரஸ்-என்.சி.பி தலைவர்களின் சுயநலமும் இங்கு இருக்கிறது.
சட்டப்பிரிவு 370
காஷ்மீரில் இந்துக்கள் இருந்திருந்தால் சட்டப்பிரிவு 370-ஐ நாங்கள் ரத்து செய்திருக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லீம் என பிரித்து பார்க்க வேண்டும். சட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். நாம் காஷ்மீரை இழந்துவிட்டோமா அல்லது நாடு தான் அழிந்துவிட்டதா என்ன?
இழந்துவிட்டோமோ
இன்னொரு காங்கிரஸ் தலைவர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், நாடு அழிந்துவிடும் என்றார். 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாடு அழிந்துவிட்டதா? காஷ்மீரை நாம் இழந்துவிடுவோம் என்று சொன்னார், நாம் என்ன காஷ்மீரை இழந்துவிட்டோமா? நீங்கள் காஷ்மீர் செல்ல வேண்டும் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள், நான் ஏற்பாடு செய்கிறேன்.
விவாதிக்கும்
எதிர்காலத்தில் 370வது பிரிவு விவாதிக்கப்படும் போது எல்லாம், அதை கேலி செய்தவர்கள், அதை எதிர்த்து நின்று சவால் விடுத்தவர்களை பற்றியும் வரலாறு குறிப்பிடும் என்பதை நான் பீட் நகரில் இருந்து சொல்கிறேன்.
வெட்கமில்லாத கட்சி
370 வது பிரிவுக்கும் மகாராஷ்டிராவிற்கும் என்ன தொடர்பு என்று ஒரு வெட்கமில்லாத எதிர்க்கட்சி கேட்கிறது. ஜம்மு-காஷ்மீருக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த மகாராஷ்டிராவின் குழந்தைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் இன்று, தங்கள் அரசியல் லாபங்களுக்காக, தங்கள் குடும்பமே என மூழ்கியிருக்கும் அத்ந கட்சியினர், ஜம்மு-காஷ்மீருடன் மகாராஷ்டிராவுக்கு என்ன தொடர்பு? என கேட்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.