சொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்
மும்பை: பி.எம்.சி வங்கி ஊழலில் பிரதான குற்றவாளிகளான எச்.டி.ஐ.எல் ரியல் எஸ்டேட் குழும ப்ரமோட்டர்களான ராகேஷ் மற்றும் சாரங் வாதவன் ஆகியோர் தங்கள் சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு, ரிசர்வ் வங்கியையும் அமலாக்கத்துறையையும் கோரியுள்ளனர்.
வங்கியின் நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக சொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் ஆடம்பர கார் மற்றும் ஒரு விமானம் உள்ளிட்ட தங்கள் சொத்துக்களை விற்க அவர்கள் அனுமதி கோரியுள்ளனர்.
மும்பை நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் ராகேஷ் மற்றும் சாரங். இவர்கள் சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கியுள்ளதலு. இந்த நிலையில்தான், அமலாக்க இயக்குநரகம், மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு அவர்க்ள் எழுதிய கடிதத்தில், முடக்கப்பட்ட, தங்களது 18 சொத்துக்களை விற்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த கடிதத்தை அவர்களின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டார்.
முதன்முதலில் ராகேஷ் மற்றும் சாரங்கை கைது செய்தது, மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு. அவர்கள் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி மதிப்பு ரூ .4,355 கோடி.
இந்த நிலையில், ராகேஷ் மற்றும் சாரங் எழுதியுள்ள கடிதத்தில் என்ன சொல்லியுள்ளார்கள் பாருங்கள்: வாடிக்கையாளர்கள் நலனுக்காக இந்த விஷயத்தைத் தீர்ப்பதற்கான நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறோம், நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களை விற்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎம்சி வங்கியின் 70 சதவீதன கடன்தொகை, எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் குழுமத்திற்கு மட்டுமே சென்றுள்ளது. இதுதான் அந்த வங்கி முடங்கிப்போக காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.