தேர்தல் நேரத்தில் இப்படியா... சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக.. பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு வலுவான கூட்டணியோடு மகிழ்ச்சியோடு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகியது. இந்த நேரத்தில், பிஎம்சி வங்கிக்கு விதிக்கப்பட்ட தடை ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.
பிஎம்சி வங்கியில் பணம் போட்ட மகாராஷ்டிரா மக்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்ட தடையால் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நேற்று மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்து சண்டை போட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனை எவ்வளவு விபரீதம் ஆகி உள்ளது என்று..
மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை வெற்றி பெற்றது. இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக முதல்முறையாக ஆட்சி அமைத்தது. சிவசேனா ஆதரவு அளித்தது.
காங் படுதோல்வி
இந்நிலையில் ஐந்து ஆண்டுகள் முதல்வராக பட்னாவிஸ் இருந்தார். அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி மொத்தம் உள்ள 48 இடங்களில் 41 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது.
எதிர்க்கட்சி தலைவர்கள்
இதனால் சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என்று எண்ணி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு பாஜகவில் அண்மையில் இணைந்தனர்.
தேர்தல் அறிவிப்பு
சட்டசபை தேர்தலும் அறிவிக்கப்பட்டது. பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையும் இறுதியானது. வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. பிரச்சாரங்களும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படி பாஜகவுக்கு எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது.
பிஎம்சி வங்கி
ஆனால் திடீர் என்று வில்லனாக வந்தது பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்ரேட்டிவ் வங்கி அதாவது பிஎம்சி வங்கி. பிஎம்சி வங்கி மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் அதிகப்படியான மக்கள் கணக்கு வைத்துள்ள வங்கியாகும். இந்த வங்கியில் பல லட்சம் மக்கள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து சேமித்து வைத்து வருகிறார்கள்.
பணம் எடுக்க தடை
இந்நிலையில் பிஎம்சி வங்கி நிதிமுறைகேட்டில் சிக்கியதால் அந்த வங்கி புதிதாக யாருக்கும் அடுத்த 6 மாதத்திற்கு கடன் கொடுக்க கூடாது என ரிசர்வ் வங்கி தடை போட்டது. மேலும் அன்றாட பரிவர்த்தனைளில் வங்கி ஈடுபடவும் தடை விதித்தது. வங்கியில் பணம் போட்டவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆறுமாத்திற்கு எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது.
25 ஆயிரமாக உயர்வு
1000 மட்டுமே எடுக்க முடியும் என்று விதிக்கப்பட்ட தடை மகாராஷ்டிராவில் புயலை கிளப்பியது. மக்கள் கொந்தளித்து போராடியதால் 10 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டது. அதன்பிறகும் மக்கள் போராடியதால் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் மக்கள் போராட்டம் இன்றும் ஓயவில்லை.
திருமணத்திற்கு
திருமணத்திற்காக பணம் சேர்த்தவர்கள், மகனை வெளிநாட்டுக்கு அனுப்ப பணம் சேர்த்தவர்கள், அவசர மருத்து செலவுக்கு பணம் சேர்த்தவர்கள், என இப்படி மொத்தமாக பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்து பணம் சேர்த்த மக்கள் பணத்தை எடுக்க முடியாமல் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
மும்பையில் போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் மும்பையில் பாஜகவின் அலுவலகத்திற்கே வந்து போராட்டம் நடத்தினர். எங்கள் பணம் எங்களுக்கு வேண்டும் குரல் எழுப்பியவர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமாதானம் பேசி அனுப்பி வைத்தார்.
பெரும் பிரச்சனை
பிஎம்சி வங்கி பிரச்சனை நாளுக்கு நாள் மகாராஷ்டிராவில் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. இந்த பிரச்னைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் பாஜகவின் வெற்றியை நிச்சயம் பாதிக்கும் என்று அங்குள்ள தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமரிடம் பேசுவேன்
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை பிஎம்சி வங்கியில் பணம் போட்டவர்கள் நேற்று சந்தித்து பேசினர். அவர்களிடம் பேசிய பட்னாவிஸ், பிஎம்சி வங்கி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசுவேன் என்று உறுதி அளித்துள்ளார். எப்படியாவது பிரச்சனையை விரைவாக முடிக்க வேண்டும் என பாஜக துடித்து வருகிறது. இல்லாவிட்டால் இதுவே பாஜகவுக்கு தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.