கட்டிட உள்வடிவமைப்பாளர் தற்கொலை... அர்னாப் கோஸ்வாமி மீது குற்றபத்திரிக்கை தாக்கல்!
மும்பை: கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேர் மீது கோர்ட்டில் போலீசார் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூன்று பேரின் குற்றங்களை நிரூபிக்க எங்களிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளதாக இதனை விசாரித்து வரும் போலீசார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் கடந்த 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டனர். பிரபல ஆங்கில டி.வி. சேனலான ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, அன்வய் நாயக்கிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காததால், இந்த தற்கொலை நடந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக அன்வய் நாயக்கின் மகள் அளித்த புகாரின்பேரில், அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அலிபாக் போலீசார் கைது செய்தனர். அதன்பின்பு அவர்கள் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்பு அர்னாப் கோஸ்வாமிக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ராய்காட் போலீசார் அலிபாகில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சுமார் 1,914 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் அர்னாப் கோஸ்வாமி உட்பட மூன்று பேரின் பெயர்கள், தற்கொலை தொடர்பாக இவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.
குற்றப்பத்திரிகையில் இந்த வழக்கில் 50 க்கும் மேற்பட்ட சாட்சிகளின் அறிக்கைகள் உள்ளதாகவும் அதில் ஒன்பது அறிக்கைகள் மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஜமீல் ஷேக் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் நாயக்கிடம் பணம் செலுத்தாதது, அவரை தற்கொலை செய்ய தூண்டியது என்பதை நிரூபிக்க நாயக்கின் பல ஊழியர்களின் அறிக்கைகள், வங்கி அறிக்கைகள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன" என்று தெரிவித்தார்.