கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவி செய்தவர்..நடிகர் சோனு சூட் மீது வழக்குப்பதிவு..எதற்கு தெரியுமா?
மும்பை: குடியிருப்பு கட்டிடத்தை அனுமதியின்றி ஹோட்டலாக மாற்றியது தொடர்பாக நடிகர் சோனு சூட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த புகாரை சோனு சூட் மறுத்துள்ளார். குடியிருப்பு கட்டிடத்தை ஹோட்டலாக மாற்றியதில் எந்த விதிமீறலும் இல்லை. இது தொடர்பாக மாநகராட்சியின் ஒப்புதலை ஏற்கனவே பெற்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது புகாருக்கு உள்ளாகி இருக்கும் இந்த ஹோட்டலில்தான் கொரோனா காலத்தில் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த மக்கள் மற்றும் மருத்துவர்களை சோனு சூட் தங்கவைத்து உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
போலீசார் வழக்குப்பதிவு
மஹாராஷ்டிரா மாநிலம் ஜூஹூ பகுதியில் 'லவ் அண்ட் லட்' என்ற பெயரில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. குடியிருப்பு வளாகமாக அமைந்திருந்த இந்த கட்டிடத்தை சோனு சூட் தற்போது ஹோட்டலாக மாற்றியுள்ளார். ஆனால் இதற்கு முறையான அனுமதி பெறவில்லை என மும்பை மாநகராட்சி போலீசில் புகார் அளித்தது. அதன் பேரில் சோனு சூட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எந்த விதிமீறலும் இல்லை
நான் எப்போதும் சட்டத்திற்குக் கட்டுப்படுகிறேன். கொரோனா தொற்றின்போது மக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தங்க வைக்க இந்த ஹோட்டல் பயன்படுத்தப்பட்டது. குடியிருப்பு கட்டிடத்தை ஹோட்டலாக மாற்றியதில் எந்த விதிமீறலும் இல்லை. இது தொடர்பாக மாநகராட்சியின் ஒப்புதலை ஏற்கனவே பெற்றுவிட்டேன்.
வழக்கு தொடருவேன்
இதற்காக கடலோர மேலாண்மைத்துறையின் அனுமதியை கேட்டுள்ளேன். ஆனால் கொரோனா காரணமாக அது தாமதமாகி உள்ளது. மும்பை மாநகராட்சியின் புகாருக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்று சோனு சூட் கூறியுள்ளார்.
மக்களுக்கு உதவி செய்தவர்
கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டன. தங்கள் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை சோனு சூட் தனது சொந்த செலவில் ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும், கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தார். தற்போது புகாருக்கு உள்ளாகி இருக்கும் இந்த ஹோட்டலில்தான் ஊருக்குச் செல்ல முடியாமல் பரிதவித்த மக்கள் மற்றும் மருத்துவர்களை சோனு சூட் தங்கவைத்து உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.