மகாராஷ்டிராவில் மீண்டும் கூட்டணி…? சிவசேனா, பாஜக இடையே தொடங்கியது பேச்சு வார்த்தை
Recommended Video
மும்பை: லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவிற்கு சிவசேனா ஆதரவளித்து வந்தாலும், அக்கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜக அமைச்சரவையில் இடமளிக்கவில்லை. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சியிலும் சிவசேனாவிற்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
அதனால், பாஜக மீது சிவசேனாவிற்கு ஏற்பட்ட மனக்கசப்பு பெரும் பிளவாக உருவெடுத்துள்ளது. இரண்டு கட்சிகளுக்கு இடையிலான மனக்கசப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்று யாராலும் கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது.
பேச்சுவார்த்தைக்கு முயற்சி
பிரதமர் மோடி உத்தரவின் பேரில், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் இருமுறை 2 கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கப்பட்டு முடியாமல் போனது. எனினும், தொடர்ந்து பாஜக மீது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் விமர்சனம் நின்றபாடில்லை.
ராமர் கோயிலுக்கு சட்டம்
அண்மையில் ராமர் கோயிலுக்கான அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்துத்துவா அமைப்பினர் உ.பி.யின் அயோத்தியில் கூட்டம் நடத்தினர். பாஜகவினர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் சிவசேனா மட்டும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு மாறாக தமது தொண்டர்களை மகாராஷ்டிராவில் இருந்து அழைத்துச் சென்று அயோத்தியில் தனியாக கூட்டம் நடத்தியது.
அறிவிப்பு இல்லை
உறவில் தொடர்ந்து சர்ச்சை நீடித்தாலும் இதுவரையும் சிவசேனா, பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கவில்லை. அதே போல், பாஜகவும் மத்திய கூட்டணி அரசில் இருந்து சிவசேனாவை வெளியேற்றவும் இல்லை.
கூட்டணி பேச்சுவார்த்தை
நிலைமை இப்படியிருக்க... கூட்டணி அமைப்பது தொடர்பாக இவ்விரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது குறித்து சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் பாஜகவும், சிவசேனாவும் சகோதரர்களாக செயல்படுகிறோம். இனியும் செயல்படுவோம்.
முழுமையான அதிகாரம்
கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு வழங்கப் பட்டுள்ளன. உத்தவ் தாக்கரேக்காக தேர்தலில் வேலை செய்ய தயாராக உள்ளோம். நாங்கள் போராடுவோம். மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் பாஜகவும், சிவசேனாவும் சகோதரர்களாக இருக்கிறோம்.
நாங்கள் தான் அண்ணன்
ஆனால் மகாராஷ்டிராவில் நாங்கள் பெரிய சகோதரர்களாக இருக்கிறோம். எப்போதும் நாங்கள் தான் அண்ணன். அதே கண்ணோட்டத்தில் தான் மாநிலத்திலும், தேசிய அரசியலிலும் முழு கவனம் செலுத்துவோம் என்று கூறினார்.
பதிலடி தந்த பட்னாவிஸ்
சஞ்சய் ராவத்தின் பேச்சுக்கு பிறகு, பாஜக தமது கருத்தை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் ஜல்னா பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது: நாட்டினுடைய வளர்ச்சிக்கு கூட்டணி வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாட்டை கொள்ளை அடிப்பவர்களுக்கு அதிகாரம் வழங்க நாங்கள் விரும்ப வில்லை. எனவே தான் நாங்கள் கூட்டணி அமைக்க விரும்புகிறோம்.
200 இடங்களில் வெற்றி உறுதி
அதற்காக பாஜகவுக்கு ஆதரவு இல்லை.... அந்த கட்சி வெற்றி பெற முடியாது... மகாராஷ்டிராவில் பலம் இல்லை என்று நினைக்க வேண்டாம். 200 இடங்களில் வெற்றி பெற தேவையான வியூகங்களை பாஜக அமைத்து வருகிறது என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டது. அப்போது பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணியே கிடையாது உத்தவ் தாக்கரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.