ஓவர் சவுண்டு... அர்னாப் கோஸ்வாமி, நடிகை கங்கனா ரனாவத் மீது மகா. சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம்
மும்பை: ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி, நடிகை கங்கனா ரனாவத் ஆகியோர் மீது மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளும் சிவசேனா எம்.எல்.ஏக்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
கொரோனா லாக்டவுனுக்குப் பின் மகாராஷ்டிரா சட்டசபையின் மழைக்கால திங்கள்கிழமை கூடியது. இன்று 2-வது நாளாக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் ரிபப்ளிக் டிவி எடிட்டர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அர்னாப் சுமத்தியதாக கூறி இந்த உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும், ரிபப்ளிக் டிவி விவாதங்களில் சுஷாசிங் சிங் மரண வழக்கு தொடர்பாக ஆதாரமே இல்லாமல் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை அர்னாப் கூறி வருவதாகவும் பிரதாப் சர்நாயக் கூறினார்.
ஊடக சுதந்திரம் என்ற பெயரில் உத்தவ் தாக்கரே, சரத்பவார் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது அவதூறை வீசி வருகிறார் அர்னாப் கோஸ்வாமி என்றும் பிரதாப் சர்நாயக் தாம் கொண்டு வந்த உரிமை மீறல் தீர்மானத்தின் போது பேசினார். அத்துடன், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அப்போது பாஜக எம்.எல்.ஏக்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பாரப் மற்றொரு உரிமை மீறல் தீர்மானத்தை முன்வைத்தார்..
தளர்வுகள் அறிவிப்பு...சென்னை உள்பட...வரும் நாட்களில் கொரோனா அதிகரிக்குமா...ஏன்!!
அப்போது, தேசத்தின் பிரதமர் மீது குற்றம்சாட்டினால் உங்களுக்கு கோபம் வருகிறது. அதே உணர்வு ஏன் மாநிலங்களின் முதல்வர்கள் மீது அவதூறு பரப்பினால் வரவில்லை? என்று பாஜக எம்.எல்.ஏக்களை பார்த்து கேள்வி கேட்டார். இதேபோல் மகாராஷ்டிரா சட்ட மேலவையிலும் உரிமை மீறல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.