இது புதுசு.. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் பேரணி.. மும்பையில் பாஜக ஏற்பாடு
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பை மாநகரத்தில், அருகருகே உள்ள இரு மைதானங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாகவும், இரு வேறு பேரணிகள் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது.
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுக்க மாணவர்கள், இஸ்லாமியர்கள், இடதுசாரி இயக்கங்கள், எதிர்க்கட்சியினரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக பாஜக மற்றும் வலதுசாரி இயக்கங்களில் இணைந்து, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவான பேரணிகளையும் நடத்தி வருகின்றனர். சென்னையிலும், சில நாட்கள் முன்பு, இப்படியான ஒரு பேரணிக்கு பாஜக ஏற்பாடு செய்து இருந்தது.
இன்று மும்பையில் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பேரணி இன்று மாலை 5 மணியளவில் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Mumbai: Former Maharashtra CM & BJP leader, Devendra Fadnavis arrives at August Kranti Maidan where demonstration is being held in support of #CitizenshipAmendmentAct. pic.twitter.com/MGomiIP7iW
— ANI (@ANI) December 27, 2019
அதில் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு, திடீரென சட்டம் குறித்து அறியாத மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் இதுபோன்ற பேரணிகளை நடத்துகிறோம் என்று தெரிவித்தார்.
இந்த மைதானத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது ஆசாத் மைதானம். இங்கு குடியுரிமை சட்டத்துக்கு திருத்தத்துக்கு எதிரான பேரணி, மக்கள் இயக்கங்களால், இணைந்து நடத்தப்பட்டது.
இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இதன் காரணமாக மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, டெல்லியில் இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இரு மாணவிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.