விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி! “கிளீனர் டூ உதவி மேலாளர்” ஸ்டேட் வங்கியில் ஒரு சாதனை பெண் -யார் அது?
மும்பை: புனேவில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கியில் துப்புரவு தொழிலாளியாக பணிக்கு சேர்ந்த பெண் ஒருவர் தனது அசாத்திய திறமையாலும் தன்னம்பிக்கையாலும் வங்கியின் உதவி பொது மேலாளராக உயர்ந்து நிற்கிறார்.
புனேவை சேர்ந்தவர் பிரதிக்ஷா தொன்வாகர். கடந்த 1964 ஆம் ஆண்டு வறுமையான குடும்பத்தில் இவர் பிறந்தார்
1981 ஆம் ஆண்டில் தனது 17 வது வயதிலேயே குடும்ப சூழல் காரணமாக திருமணம் செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
கணவர் மரணம்
7 ஆம் வகுப்பு மட்டுமே படித்த பிரதிக்ஷாவால் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், திருமணம் செய்ததாலும் கல்வியை தொடர முடியவில்லை. பிரதிக்ஷாவின் கணவர் இந்திய ஸ்டேட் வங்கியில் புத்தகங்களை ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், திருமணம் செய்த மூன்றே ஆண்டுகளில் அவர் உயிரிழந்துவிட, சோகத்தின் உச்சிக்கே சென்றார் பிரதிக்ஷா.
கல்வியே ஏணி
ஆனால், மனம் தளராமல் தனது கணவர் பணிபுரிந்த வங்கியிலேயே குடும்ப சூழ்நிலை காரணமாக துப்புரவு தொழிலாளராக பணியில் சேர்ந்தார். தற்காலிக பணியாளராக இருந்து வந்த பிரதிக்ஷா ஓய்வு நேரங்களில் கல்வியை தொடர்ந்தார். கல்விதான் தன்னை அடுத்த நிலைக்கு உயர்த்தும் என்பதை ஆணித்தரமாக உணர்ந்த அவர், தன்னம்பிக்கையை இழக்காமல் முழு மூச்சாக படித்தார்.
புதிய பணி
அதன் பயனாக 10 ஆம் வகுப்பில் அவர் தேர்ச்சியடைந்தார். இதனால் அவருக்கு வங்கி ஒன்றில் தூதுவர் பணி கிடைத்தது. அடுத்த நிலையை அடைந்து விட்டோமே என்று திருப்தியடைந்து விடாமல், இன்னும் உயர் பதவிகளை அடைய வேண்டும் என தொடர்ந்து போராடினார். கல்வியை தொடர்ந்தார். SNDT கல்லூரியில் உயர்கல்வியை நிறைவு செய்த அவர், முதல் தேர்விலேயே வெற்றி பெற்று வங்கியில் பயிற்சி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.
விடா முயற்சி.. விஸ்வரூப வெற்றி
அதன் பின்னரும் பிரதிக்ஷா உயரம் தொட உழைத்தார். அவரது தொடர் முயற்சியின் பயனாக மும்பையில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கியின் கிளையில் உதவி பொதுமேலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். வறுமையான குடும்பம், குழந்தை திருமணம், கணவர் மரணம், துப்புரவு பணி என எதை நினைத்தும் மனம் உடைந்துவிடாமல் தன்னம்பிக்கையோடு உழைந்ததன் பயனாக இந்த உயரத்தை அடைந்து யாவருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் அவர்.
குழந்தைகளுக்கு நல்ல கல்வி
பிரதிக்ஷாவுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கும் நல்ல கல்வியை அவர் வழங்கி வருகிறார். அவரது மகன் வினாயக் இளங்கலை பொறியியல் படித்து ஐஐடியில் மேற்படிப்பு முடித்து விட்டு புனேவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல பணியில் உள்ளார். அவரது மகள் தீக்ஷா பேக்கரி பொருட்களை தயாரித்து வருகிரார். மற்றொரு மகனான ஆர்யா தற்போது படித்து வருகிறார்.