பழம்பெரும் கட்சி, ஏராளமான தலைவர்கள்.. ஆனால் தொண்டர்கள் எங்கே.? காங்கிரஸை கேட்கும் சிவசேனா
மும்பை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சும், ஆளுமையும் நாட்டு மக்களை சிறிதும் கவரவில்லை என்பது மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக சிவசேனா விமர்சித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இம்முறையும் படுதோல்வியை சந்தித்து ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனது. இந்நிலையில் ராகுலின் தலைமை பற்றி விமர்சித்து, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல்களில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் படு தோல்வி பெற்றுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் பெற்ற தோல்வியை விட வெட்கக்கேடான தோல்வியை தற்போது காங்கிரஸ் பெற்றுள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் ராகுல் காந்தியின் அணுகுமுறை வாக்காளர்களை கவரவில்லை என்பதே. பிரச்சாரங்களின் போது ராகுல் பேசிய பேச்சுகள் எந்த ஒரு குடிமக்களின் மனதிற்கும் சென்று சேரவில்லை.
அவரது ஆளுமையும் மக்களை கவரக்கூடிய அளவிற்கு இல்லை என விமர்சித்துள்ளது. யாருக்கும் ஒரு முன்மாதிரியாக ராகுல் காந்தி விளங்கவில்லை என தெரிவித்துள்ளது.
கலக்கிய மக்கள் நீதி மய்யம்.. கடும் உற்சாகத்தில் கமல்ஹாசன்.. அடுத்த வியூகம் ரெடி!
மோடி மற்றும் பாரதிய ஜனதா பற்றி மக்கள் முன் அவர் எடுத்துரைத்த குறைபாடுகள் குறித்த விவரங்கள், மக்களிடம் எள்ளளவும் எடுபடவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எதிரொலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த தலையங்கத்தில் தன் கட்சி தொண்டர்களையே காங்கிரஸ் சிறிது சிறிதாக இழந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. என்ன தான் பழம் பெரும் கட்சி என கூறிக்கொண்டாலும், ஏராளமான தலைவர்களை கொண்டிருந்தாலும் போதிய தொண்டர்கள் இன்றி அக்கட்சி பரிதாபமாக காட்சியளிப்பதாக கூறியுள்ளது.
கிழக்கு உத்தரப்பிரதேச பொதுச்செயலாளாராக, பிரியங்கா காந்தியை நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னரும் அங்கு எவ்வித மாற்றமும் நிகழவில்லை. கடந்த தேர்தலை விட இம்முறை விட ஒரு தொகுதி குறைவாக தான் காங்கிரஸ் ஜெயித்துள்ளது என சரமாரியாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து அந்த தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.