உயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு
Recommended Video
மும்பை: மும்பையில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த பிச்சைக்காரர் தனது குடிசையில் ரூ.1.75 லட்சத்துக்கு சில்லறை காசுகளை வைத்திருந்ததுடன், வங்கிக் கணக்கில் ரூ.8.77 லட்சத்துக்கான டெபாசிட் செய்திருக்கிறார். இதை கண்டு ரயில்வே போலீசார் ஆச்சர்யம் அடைந்தனர்.
மும்பையின் மன்கர்ட்- கோவண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் 82 வயதான நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் யார் என்ன என்பது சுற்றி உள்ளவர்களிடம் விசாரித்து இருக்கிறார்கள்.
அவர் பெயர் பிரடிசந்த் பனாரம் ஆசாத் என்பதும் ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுப்பவர் என்றும் அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை, என்றும் தனியாகவே ரயில்வே டிராக் அருகிலுள்ள குடிசையில் வசித்து வருகிறார் என்றும் அந்த பகுதிவாசிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதை கேட்ட ரயில்வே போலீசார், அவரது குடிசைக்குள் சென்று உறவினர்களை பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்ற நோக்கில் பார்த்திருக்கிறார்கள். அப்போது அங்கு நான்கு பெரிய டப்பாக்கள் இருந்திருக்கின்றன. அதில் சில்லறை காசுகளாக இருந்தன.
அதை எண்ணியபோது ரூ.1.75 லட்சம் இருந்திருக்கிறது பின்னர் அருகிலேயே பெரிய இரும்பு பெட்டி ஒன்று இருந்தது. அதில் வங்கி பாஸ்புக் இருந்திருக்கிறது. அத்துடன் இரண்டு வங்கிகளில் சேர்த்து சுமார் ரூ.8.77 லட்சத்துக்கான வங்கி வைப்புத் தொகைக்கான ரசீது, ஆதார், பான்கார்டு ஆகியவையும் இருந்திருக்கிறது.
வங்கி பாஸ்புக்கில் நாமினி என்று அவர் மகன் சுகதேவ் பெயரும் ராஜஸ்தானில் உள்ள ராம்கர் முகவரியும் இடம் பெற்று இருந்திருக்கிறது. இதையடுத்து சுகதேவை தொடர்புகொண்ட போலீசார் அவரது தந்தையின் உடலை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்கள்.