மராட்டியத்தில் 144 தடை, திடீர் அச்சம்.. ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்.. ரயில்வே துறை கோரிக்கை
மும்பை: சொந்த ஊர் திரும்ப ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் மும்பையிலுள்ள ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுள்ள நிலையில், யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் ரயில் நிலையங்களில் கூட்டத்தைத் தவிர்க்குமாறும் மத்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு கடந்த தில தினங்களாகவே 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிராவில் உள்ளனர்.
இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இரவு ஊரடங்கையும் வார இறுதி ஊரடங்கையும் மராட்டிய அரசு அறிவித்தது.
144 தடை உத்தரவு
இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனால், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அடுத்த 15 நாட்களுக்கு அமல்படுத்துவதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார். மராட்டியத்தில் ஒரு இடத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு இந்தத் தடை உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முற்றுகை
இந்தத் தடை உத்தரவு இன்று இரவு எட்டு மணி முதல் அமலுக்கு வருகிறது. மே 1ஆம் தேதி காலை 7 மணி வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்பால் பீதியடைந்த பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப மும்பையிலுள்ள லோக்மண்ய திலக் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். முன்னதாக நேற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் மும்பையில் இருந்து வெளியேறினர்.
பீதியடைய வேண்டாம்
ஒரே நேரத்தில் மக்கள் திரண்டதால் லோக்மண்ய திலக் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் ரயில் நிலையங்களில் கூட்டத்தைத் தவிர்க்குமாறும் மத்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. இருந்தாலும்கூட, கடந்த முறை போலவே இந்த முறையும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டால் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அச்சமடைந்தவர்கள் மும்பையைவிட்டு வெளியேறி, சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
மத்திய ரயில்வே
இந்நிலையில் இது குறித்து மத்திய ரயில்வேவின் தலைமை செய்தித் தொடர்பாளர் சிவாஜி சுதார், கன்பார்ம் டிக்கெட்டுகளை கொண்ட பயணிகளை மட்டுமே ரயில் நிலையங்களில் நாங்கள் அனுமதிக்கிறோம். மேலும், கூட்டம் அதிகமாக உள்ளதாலும், கொரோனா நெறிமுறைகள் காரணமாகவும் பயணிகளை ரயில் புறப்படும் நேரத்தைவிட 30 நிமிடங்கள் முன்னதாக வரும்படி அறிவுறுத்தியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
கொரோனா
மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 60,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல அங்கு 281 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக புனே வட்டத்தில் 1.18 லட்சம் பேரும் மும்பை வட்டத்தில் 86 ஆயிரம் பேரும் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.