வேறவழியில்லை... ராஜ் தாக்கரேவுடன் கூட்டணிக்கான பேச்சுகளை நடத்தும் பாஜக
மும்பை: மகாராஷ்டிராவில் வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பாஜக, ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவை வளைக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.
பாஜகவின் கூட்டணியில் நீண்டகாலமாக இடம்பெற்றிருந்தது சிவசேனா. கூட்டணியை முறித்துக் கொண்டு பரம வைரிகளாக இருந்த காங்கிரஸ், என்சிபியுடன் கை கோர்த்து ஆட்சியிலும் அமர்ந்துவிட்டது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தங்களது கோட்டையான நாக்பூரையே பாஜக, காங்கிரஸிடம் பறிகொடுத்தது. அத்துடன் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் சொந்த ஊரிலேயே பாஜக வேட்பாளர் தோல்வியை தழுவினார்.
மகாராஷ்டிரா பாஜகவில் நீடித்து வரும் உட்கட்சி பூசல்தான் இந்த படுதோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் சிவசேனா இல்லாத சூழ்நிலையில் அந்த இடத்துக்கு ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவை கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சிஏஏ வுக்கு ஆதரவு கொடுங்க மக்களே.. தொப்புன்னு மக்கள் காலில் விழுந்த மத்திய அமைச்சர்!
ஏற்கனவே பாஜக தலைவர்களுடன் ராஜ்தாக்கரே ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நேரில் சந்தித்து ராஜ்தாக்கரே பேசினார்.
இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த தேவேந்திர பட்னாவிஸ், ராஜ்தாக்கரேவின் கொள்கைகள் வேறு..எங்களது கொள்கைகள் வேறு.. ஒருவேளை ராஜ்தாக்கரேவின் நிலைப்பாடுகள் மாறினால் எதிர்காலத்தில் கூட்டணி குறித்து பேசலாம் என கூறியுள்ளார்.